கொள்ளை போகிறதா பொதுத்துறை வங்கி பணம்.. 4 வருடங்களில் ரூ.22,743 கோடி அபேஸ்
Recommended Video
டெல்லி: 2012-2016ம் ஆண்டு காலகட்டத்திற்கு நடுவே, மோசடிகளால், பொதுத்துறை வங்கிகள் 227.43 பில்லியன் ரூபாயை இழந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. இது ரூ.22,743 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், குஜராத் வைர வியாபாரி, நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பியோடிய செய்தியை தொடர்ந்து வங்கித்துறையில் நடந்த பல மோசடிகள் வெளியே வரத்தொடங்கியுள்ளன.
மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி டேட்டாவை அடிப்படையாக வைத்து கூறுகையில், 2017 டிசம்பர் 21 வரையிலான நிலவரப்படி, வங்கி மோசடி தொடர்பாக 25,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி
மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்படி, 2016-17ன் முதல் 9 மாதங்கள், ஐசிசிஐ வங்கியில் 455 மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 429 பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியில் 244 மோசடிகள் நடந்துள்ளதாகவும், ஹெச்டிஎப்சி வங்கியில் 237 மோசடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வங்கிகள் தப்பவில்லை
ஸ்டேட் வங்கியை சேர்ந்த 64 ஊழியர்கள், 49 ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர்கள், மற்றும் 35 ஆக்சிஸ் வங்கி ஊழியர்கள் மீது மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. 2016ல் சிண்டிகேட் வங்கியில் 4 பேர் மொத்தம் 386 கணக்குகளை துவக்கி, போலியாக காசோலைகள் மூலமாகவும், எல்ஐசி பாலிசி கிரெடிட் போன்றவற்றின் மூலமாகவும், 10 பில்லியன் அளவுக்கு நடந்த மோசடி இதற்கு ஒரு உதாரணம்.
ஆந்திரா வங்கி அதிகாரி
இவ்வாண்டு, ஆந்திரா வங்கி இயக்குநரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் 5 பில்லியன் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்றிற்கு உடந்தையாக இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
பொதுத்துறை வங்கிகள் 2012 மற்றும் 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ரூ.227.43 பில்லியன் அளவுக்கான பணத்தை மோசடிகளால் இழந்துள்ளது என்று பெங்களூர் ஐஐஎம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.