பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்பு.. கடைசி நேரத்தில் கட்சி தாவிய சித்து அமைச்சரானார்!
சண்டீகர்: பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் இன்று பதவியேற்றார். கிரிக்கெட் வீரரும், பாஜகவிலிருந்து சமீபத்தில் காங்கிரசில் இணைந்தவருமான நவ்ஜோத்சிங் சித்து அமைச்சராக பதவியேற்றார்.
பஞ்சாப் சட்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77இல் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் (15) அதன் கூட்டணி கட்சியான பாஜக (3) என மொத்தம் அக்கூட்டணி 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், அமரீந்தர் சிங்குக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ஆளுநர் வி.பி. சிங் பட்னூர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்றது இது 2ஆவது முறையாகும். இதற்கு முன்பு பஞ்சாப் முதல்வராக கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அவர் பதவி வகித்துள்ளார். அதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

பாஜகவில் இருந்து விலகி சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து அமைச்சராக பதவியேற்றார்.












Click it and Unblock the Notifications