பஞ்சாபில் சிறு, குறு விவசாயக் கடன் தள்ளுபடி.. முதல்வர் அமரீந்தர் சிங் அதிரடி
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை நேற்று கூடியதும் விவசாய கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பினை வெளியிட்டு பேசிய அவர், 5 ஏக்கர் வரை விவசாய நிலங்களைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், மற்ற குறு விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த கடன் தள்ளுபடியால் மாநிலத்தில் உள்ள 18.5 லட்சம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 10.25 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இனி மது விற்க அனுமதி அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதேபோல், பஞ்சாப் சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications