மச்சி, ஒரு லைக் போடேன்... சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் போட்டோ போட்ட பஞ்சாப் கைதிகள்!
சண்டிகர்: பஞ்சாபில் குற்றவாளிகள் சிலர் சிறையில் இருந்தபடியே செல்போன் வாயிலாக பேஸ்புக்கை பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.
சிறைக்குள் இருந்தபடியே குற்றவாளிகள் சதிச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க, செல்போன் உள்ளிட்ட சில பொருட்கள் அங்கு தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால், தடைகளை மீறி அத்துமீறி அவ்வப்போது சிறைக்குள் செல்போன் உள்ளிட்டப் பொருட்கள் கொண்டு செல்லப் படுகின்றன. இதற்காக அடிக்கடி சிறை அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்கின்றனர். ஆனால், அவர்களின் கண்களிலும் சிக்காமல் பஞ்சாபில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பஞ்சாபில், பாதிண்டா மத்திய சிறையில் போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக தாதா குல்பர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் குல்பர்சிங்கின் பேஸ்புக் பக்கத்தில் சில புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டிருப்பது போலீசின் கவனத்திற்கு தெரிய வந்தது.
அதில் ஒரு புகைப்படத்தில் ஒருவர் போனில் பேசுவதுபோல் போஸ் கொடுக்க மற்ற கைதிகள் ‘ஹாயாக' சுவற்றில் சாய்ந்தபடி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் உடனடியாக கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தினர். ஆனால், அவர்களால் செல்போன் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி அச்சிறையின் துணை கண்காணிப்பாளர் மான்ஜித் சிங் கூறுகையில், "இந்த தகவல் தெரிந்தவுடன் அவர்கள் அனைவரும் வெவ்வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சிறையில் பயன்படுத்திய போன்களை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என்றார்.
சிறையில் இருந்தபடியே பஞ்சாப் கைதிகள் பேஸ்புக்கை பயன்படுத்துவது இது முதல்முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறை என்பதே குற்றவாளிகள் தங்களது குற்றத்தை உணர்ந்து திருந்துவதற்கான களம் தான். ஆனால் அங்கேயும் சென்று சிலர் குற்றங்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக அமைகிறது.