உ.பி முதல் கோவா வரை.. 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. உங்களது டெய்லிஹன்ட்டில் நேரலையாக!
டெல்லி: பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது.
விறுவிறுப்பாக சென்ற உத்தர பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநில தேர்தல்கள் ஒருவழியாக முடிந்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான பிரச்சார கூட்டங்கள், பேரணிகள், வாகன பிரச்சாரங்களுக்கு இந்த முறை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக இந்த முறை தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற்றது. 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மெஜாரிட்டி பெற 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் களம் கண்டன.
7 கட்ட தேர்தல் என்பதால் தேர்தல் களம் கடந்த ஒரு மாதமாக இங்கு விறுவிறுப்பாக இருந்தது. ராமர் கோவில் விவகாரம், கர்நாடக ஹிஜாப் விவகாரம், இந்து முஸ்லீம் பிரச்சனை, விவசாய பிரச்சனை, உக்ரைன் போர் என்று பல விஷயங்கள் இந்த தேர்தல் நேரத்தில் உத்தர பிரதேசத்தில் விவாத பொருளாக இருந்தது. யோகி ஆதித்யநாத தலைமையிலான பாஜக அங்கு ஆட்சி நடத்தி வரும் நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உத்தரகாண்டை பொறுத்தவரை இந்த முறை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு 70 தொகுதிகள் உள்ளன. இங்கு மெஜாரிட்டி பெற 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். உத்தரகாண்டில் 2014ல் பாஜக சட்டசபை தேர்தலை வென்று ஆட்சியை பிடித்த போது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி ஏற்றார். ஆனால் அவர் கடந்த 2021 மார்ச் 9ம் தேதி ராஜினாமா செய்த நிலையில் திரியாத் சிங் ராவத் முதல்வராக பதவி ஏற்றார். அதன்பின் ஜூலை 3ம் தேதி அவருக்கு பதிலாக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றார். 5 வருடத்தில் இங்கு 3 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்டில் இந்த முறை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக இடையே பலமுனை போட்டி நிலவியது. இது போக இடதுசாரிகள் கூட்டணி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளும் களத்தில் இருந்தன. புஷ்கர் சிங் தாமியை முன்னிறுத்தி பாஜக தேர்தலை சந்தித்தது. ஆம் ஆத்மி கட்சி அஜய் கொத்தியாலை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவதை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்பை பொறுத்தவரை அங்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, சிரோன்மணி அகாலிதளம், பாஜக இடையே கடும் போட்டி இங்கு நிலவி வந்தது. நீக்கப்பட்ட 3 விவசாய சட்டங்கள், விவசாய போராட்டம், பிரதமர் மோடியின் கான்வாய் மறிப்பு போன்ற விவகாரங்கள் இந்த தேர்தலில் அதிக கவனம் பெற்றன.
காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங், கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சரன்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் முதல்வராக்கியது. இந்த நிலையில் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் இந்த தேர்தலை எதிர்கொண்டது, ஆம் ஆத்மி சார்பாக பகவத் சிங் மன் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். பாஜக சார்பாக அஸ்வினி குமார் சிங் முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் பிரச்சாரம் இங்கு தீவிரமாக நடந்த நிலையில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பஞ்சாப்பில் 117 இடங்கள் உள்ள நிலையில் அங்கு பெரும்பான்மை பெற 59 இடங்களில் வெல்ல வேண்டும்.
கோவா சட்டசபை தேர்தலை பொறுத்தவரை அங்கு 40 இடங்களில் பிப்ரவரி 14ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கு பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றிபெற வேண்டும். அங்கு பாஜக சார்பாக முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்த நிலையில் பிரமோத் சாவந்த் முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கோவாவில் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி கோவா பார்வர்ட் பார்டியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு பக்கம் தனி கூட்டணி அமைக்க இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி சுயேட்சைகளுடன் இணைந்து போட்டியிட்டது. பலமுனை போட்டி அங்கு நிலவிய நிலையில் தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் மணிப்பூரில் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 60 சட்டசபை தொகுதிகள் அங்கு உள்ள நிலையில் 31 இடங்களில் வெற்றிபெற்றால் மெஜாரிட்டி கிடைக்கும். பாஜக, காங்கிரஸ், நாகா பீப்பிள் பார்ட்டி, நாகா பீப்பிள் ப்ரோன்ட் ஆகிய கட்சிகளுக்கு இடையே அங்கு கடும் போட்டி நிலவியது. முன்பு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை தனித்து களமிறங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி சிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ம் தேதி வர உள்ளன. இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையும் டெய்லிஹன்ட் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது.
தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்கள், தேர்தல் கட்சிகளின் பின்புலங்கள், வெற்றியாளர்களின் பின்புலங்கள், முந்தைய வரலாறுகள், நுணுக்கமான தரவுகள் என அனைத்தையும் நீங்கள் டெய்லிஹன்ட் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
தேர்தல் குறித்த கள ஆய்வு முடிவுகள், அது தொடர்பான ஆழ்ந்த விரிவான கட்டுரைகள், சாமானியர் முதல் அனைவருக்கும் புரியும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் டெய்லிஹன்ட் மூலம் உங்களுக்கு அளிக்கவுள்ளோம். இந்தியா முழுவதும் எங்களிடம் உள்ள சிறந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி தேர்தல் முடிவுகளை நேரடியாக உங்களுக்கு அளிக்கவுள்ளோம்.
அது மட்டுமா என்ன.. தேர்தல் தொடர்பான டிரெண்டிங் தகவல்கள், மீம்கள், வீடியோக்கள், வைரல் பெட்டிகள் அனைத்தையும் வழங்க உள்ளோம். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்கள் டெய்லி ஹன்ட்டுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.