இந்தியாவின் 10 ஸ்மார்ட் சிட்டிகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யும் கத்தார் இளவரசர்
டெல்லி: இந்தியாவில் உருவாக உள்ள ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய கத்தார் இளவரசர் ஹமத் பின் நாசர் அல் தானி தயாராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் கத்தார் இளவரசர் ஹமத் பின் நாசர் அல் தானியின்(51) கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் இந்தியாவின் 10 ஸ்மார்ட் நகரங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய தயாராக உள்ளார். அவர் ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் மிதேஷ் ஷர்மாவுடன்(31) சேர்ந்து ஸ்மார்ட் நகரங்கள் தவிர ரியல் எஸ்டேட், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகிய திட்டங்களில் முதலீடு செய்கிறார். இதற்காக அவர்கள் இருவரும் சேர்ந்து என்.ஆர்.எஸ். என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.

அவர்கள் மின்சாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளிலும் முதலீடு செய்ய உள்ளனர். அவர்கள் தங்களின் முதல் திட்டத்தை வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு நம் நாட்டில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹமதின் கத்தார் நிறுவனமான நர்கிஸ் ஆர்ட்ஸ் ஷர்மாவின் கிங்ஸ் கிராப்ட் பிரேம்ஸ் 24 பிரைவேட் லிமிடெட்டுன் அண்மையில் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனங்கள் 5 பாலிவுட் படங்களை தயாரிக்க உள்ளன. கிரானைட் சுரங்கம், ரியல் எஸ்டேட்டில் உள்ள ஷர்மா ஹமதுடன் சேர்ந்து கத்தாரில் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை ஹமத் மற்றும் ஷர்மா சந்தித்து பேசிய பிறகே ஸ்மார்ட் நகரங்களில் முதலீடு செய்யும் முடிவை எடுத்துள்ளனர்.
ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் தொடர்பாக ஹமத் மற்றும் ஷர்மா ஆகியோர் ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் ரூ.12 ஆயிரம் கோடியும், ஆந்திராவில் ரூ.60 ஆயிரம் கோடியும் முதலீடு செய்ய உள்ளனர். இது தவிர மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ரூ.38 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications