கேரளா: ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவி தற்கொலை... 6 'சீனியர்ஸ்' கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 3 மாணவிகள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செரன்டத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மைக்ரோபயாலஜி பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி ஹசினாஸ் ஹமீத்(19). அவர் தொடனூரில் உள்ள தனது வீட்டில் கடந்த 23-ந் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரியில் படிக்கும் அவரது சீனியர் ராகிங் செய்ததால் தான் ஹசினாஸ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், கல்லூரி வளாகத்தில் ராகிங் எதுவும் நடைபெறவில்லை என கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக ஹசினாஸ் ஹமீத் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஹசினாஸ் படித்துவந்த கல்லூரியில், பி.எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்துவரும் 3 சீனியர் மாணவிகள் மற்றும் 3 மாணவர்களை நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.