சகிப்புத்தன்மை குறைந்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும்: மத்திய அரசை கண்டித்த ரகுராம் ராஜன்
டெல்லி: நாட்டில் எல்லா மட்டத்திலும் சகிப்பு தன்மை முக்கியம், சகிப்பு தன்மை குறைந்து போனால், வன்முறை கலாசாரம் பெருகும், நாட்டின் வளர்ச்சி முடங்கும் என்று ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் தான், மத்திய அரசை மறைமுகமாக சாடியுள்ளார்.
டெல்யில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ரகுராம் ராஜன் பேசியது: இந்தியாவில் தற்போது, எப்போதும் இல்லாத அளவுக்கு சகிப்பு தன்மை குறைந்து வருகிறது. நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு, சமுதாயத்தின் சகிப்பு தன்மைதான் பெரிதும் கைகொடுக்கிறது. பல வகையில் தொழில், வர்த்தக உறவுகளை பெருக்குகிறது; நாடுகள் இடையே இணக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால், சமீப காலமாக இந்தியாவில் அளவுக்கு அதிகமான அரசியல் குறுக்கீடுகளும், தன்னிச்சையான முடிவுகள் திணிக்கப்படுவதும், அதை மக்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் பரவி வருகிறது. இது மக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்பதுடன், நாட்டின் சமத்துவ நோக்கத்துக்கும் பாதிப்பாக உள்ளது.
யாரையும் உடல் ரீதியாக காயப்படுத்துவது, வார்த்தைகளால் வருத்தம் ஏற்பட வைப்பது, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது அவர்கள் விரும்பாத விஷயங்களை கட்டாயப்படுத்துவது, பொதுவான கருத்துரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பது போன்றவை நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தாது.
ஒரு கருத்தை திணிப்பதோ, அதை ஏற்க வைப்பதோ கூடாது; சமுதாயத்தில் பல்வேறு கருத்துகள் இருக்கலாம். அது தவறில்லை. அதற்காக, எதிர்க்கருத்து சொல்பவர்களை தடுக்கக் கூடாது; தடை போடுவதால் கருத்து சுதந்திரத்தைதான் பறிப்பதாக பொருள். எந்த விவாதத்தையும் தடை செய்வதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது.
இப்படி தடை போடுவதால் சகிப்பு தன்மைதான் குறைகிறது. தடைபோடும் விஷயத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி சகிப்பு தன்மையைத்தான் குறைக்க வைக்கிறது. வீண் விவாதங்கள் கிளம்பி, விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்பட வழிவகுக்கிறது. எந்த பிரிவினரின் உணர்வுகளும் புண்படக்கூடாது, அவர்களின் சவாலான கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும். உதாசீனப்படுத்த கூடாது. ஒரு நாடு முன்னேற இதுவும் முக்கியம். ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஒதுக்கி மட்டும் நாடு வளர்ந்து விடாது.
ஹிட்லர் ஆட்சியில் ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின, எல்லா ஊழியர்களும் சரியான நேரத்தில் அலுவலகத்தில் பணி செய்தனர். 1975ல் இருந்து 77 வரை இந்தியாவில் கூட நெருக்கடி நிலையின் போது இப்படித்தான் எல்லாம் சரியாக இருந்தன. ஆனால், ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இரும்புக்கரம் கொண்ட அரசு தேவைதான். அதே சமயம், சட்டமும், ஜனநாயகமும் கைகோர்ப்பதாக அமைய வேண்டும். அப்போதுதான் திடமான அரசால் வளர்ச்சியை காண முடியும். இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.