ராகுல் காந்தி சுமத்திய லஞ்ச குற்றச்சாட்டு.. கேலியாக கடந்து சென்ற மோடி, பாஜக!
டெல்லி: பிரதமர் மோடி தனியார் நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றதாக ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை கேலியாக கையாண்டுள்ளார் மோடி.
குஜராத் மாநிலம் மேசானா பகுதியில் நடந்த காங்கிரஸ் பொது கூட்டத்தில் அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அங்கு ராகுல் காந்தி பேசியதாவது: சஹாரா குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது அந்த நிறுவனத்தின் முக்கிய டைரிகள் கைப்பற்றப்பட்டன.
அந்த டைரியில், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013 அக்டோபர் முதல் 2014 பிப்ரவரி வரை, ஹாரா நிறுவனம் கிட்டதட்ட 9 முறை, அவருக்கு மொத்தம் ரூ.40 கோடி பணம் வழங்கியிருக்கின்றனர்.
விசாரணை
இதேபோல பிர்லா நிறுவனங்களில் இருந்தும் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ரூ.12 கோடி பணம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக விரைவில் விசாரணை துவங்க வேண்டும்.
ஆச்சரியம்
மோடிக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு பற்றி அனைத்து ஆவணங்களும் வருமான வரித் துறையிடம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
மக்கள் சார்பாக கேள்வி
இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். சஹாரா, பிர்லா நிறுவன அதிகாரிகள், மோடிக்கு லஞ்சம் கொடுத்தார்களா? இல்லையா? என்பதை அறிய விரும்புகிறோம். ஒட்டுமொத்த மக்களின் சார்பில் இக்கேள்வியை நான் எழுப்புகிறேன்.
மோடிக்கு கேள்வி
நாட்டுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை சந்தேகிக்கும் நீங்கள், இந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும் என்று பேசினார் ராகுல் காந்தி. மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்து தன்னிடம் தகவல் இருப்பதாக ராகுல் காந்தி சில தினங்கள் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடி கிண்டல்
இதனிடையே ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை கேலியாக கையாண்டுள்ளார் பிரதமர் மோடி. வாரணாசியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சியில் ஒரு இளைஞர் உள்ளார். அவர் இப்போதெல்லாம் நன்கு பேச படித்துக் கொண்டார். அவர் பேச கற்றுக் கொண்டதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என பெயரை தெரிவிக்காமல் கேலி செய்தார்.
பாஜக கேலி
பாஜக கட்சி ராகுல் காந்தி போன்றோர் கூறும் குற்றச்சாட்டுக்கெல்லாம் பதிலளிக்க தேவையில்லை. ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் வெளியே வந்ததும் திசை திருப்ப முயற்சி நடக்கிறது, என கூறியுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், என்னை கேலி செய்கிறார்கள் என்று தெரியும். எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்துகொள்ளட்டும் என தெரிவித்தார்.
பழைய குற்றச்சாட்டு
மோடி மீதான இக்குற்றச்சாட்டு புதிது கிடையாது. ஏற்கனவே பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் இக்குற்றச்சாட்டை முன் வைத்தவர்தான். சிறப்பு விசாரணை குழு இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று, இதே சஹாரா நிறுவன டைரி ஆதாரத்தை வைத்து பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், தக்க ஆதாரமில்லாமல் அவ்வாறு உத்தரவிட முடியாது என சுப்ரீம்கோர்ட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.