என் வழி ‘காந்தி’ வழி... மோடியோ ‘ஹிட்லர்’ வழி: குஜராத்தில் ராகுல் பேச்சு
ஆமதாபாத்: ‘சில தலைவர்கள் ஹிட்லர் போன்றவர்கள்; நான் மகாத்மா காந்தி வழியில் நடப்பவன்' என தனது குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
16வது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு, அவர் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தனது பிரசார கூட்டங்களில், ‘மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஊழல் அரசு' என்றும், ‘நான் பிரதமராக வந்தால் நாட்டின் காவலனாக டெல்லியில் இருப்பேன்' எனறும் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் மோடி.
இந்நிலையில், நேற்று குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கேதாவில் ராகுல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மோடிக்கு பதிலடி தருகிற வகையில் கூறியதாவது:-
காவலன் அல்ல...
இந்தியாவுக்கு (மக்களுக்கு) தேவை காவலன் அல்ல. மக்கள் தங்கள் தேவையாக உரிமைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள். குஜராத்தில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிப்பவர்கள், எப்படி விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முடியும்? இது ஒரு காவலன் செய்யக்கூடிய வேலையா?
குஜராத் ஒளிர்கிறதா?
குஜராத் ஒளிர்கிறது. ஆனால் ஒரு சில மக்கள்தான் ஒளிர்கிறார்கள். ஏழைகளுக்காக, பெண்களுக்காக ஒளிரவில்லை.
படேல் பற்றித் தெரியுமா...?
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை எழுப்புகிறார்கள். நல்லது. ஆனால் சிலை வைப்பவர்கள், சிலை வைப்பதற்கு முன் யாருக்கு சிலை வைக்கிறார்களோ, அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சர்தார்பட்டேலை பற்றி பேசுவதற்கு முன்பு நீங்கள் (நரேந்திரமோடி) கற்றுக்கொள்ள வேண்டும்.
சித்தாந்தவாதிகள்...
நாட்டுக்கு மகாத்மா காந்தியையும், சர்தார் பட்டேலையும் குஜராத் மாநிலம் தந்திருக்கிறது. அவர்கள் இருவரும் சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் சித்தாந்தவாதிகள்.
காங்கிரஸ் என்றால் அன்பு...
காங்கிரசை அழித்து விடுவோம் என்று (பாரதீய ஜனதாவினர்) கூறுகிறார்கள். ஆனால் அந்தக் காங்கிரசை உருவாக்கியவர்கள் காந்தியும், பட்டேலும் அல்லவா? பாரதீய ஜனதாவின் பிரச்சினை கோபம். அவர்கள் கோபமும், வெறுப்பும் நிரம்பியவர்கள். ஆனால் காங்கிரசுக்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டும்தான்.
இரண்டு வகை தலைவர்கள்...
இரண்டு வகையான தலைவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை தலைவர்கள் மகாத்மா காந்தி போன்றவர்கள். அவர்கள் மக்களோடு மக்களாக செல்வார்கள். அவர்களிடம் மக்களுக்கான கொள்கைகள் இருக்கும். மக்களின் அறிவில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். அந்த மக்களிடம் அவர்கள் செல்வார்கள். அவர்களிடம் கேட்டு அறிந்து கற்றுக்கொள்வார்கள். மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவும் விரும்புவார்கள்.
ஹிட்லருடன் ஒப்பீடு...
இன்னொரு வகை தலைவர்கள் உண்டு. அவர்களுக்கு சிறந்த உதாரணம் ஹிட்லர்தான். அவர்தான் மக்களிடம் போகத்தேவை இல்லை என எண்ணினார். ஒட்டுமொத்த உலக அறிவும் தனக்கு இருக்கிறது என நம்பினார். அத்தகைய தலைவர்தான் நான் அதைச்செய்தேன், இதைச்செய்தேன் என்பார்கள். உண்மையான தலைவர்கள், மக்களிடம் செல்கிறவர்கள்தான்.
என் வழி காந்தி வழி....
நான் மகாத்மா காந்தி வழியில் நடக்க முயற்சிப்பவன்' என இவ்வாறு ராகுல் காந்தி தனது உரையில் தெரிவித்தார்.