தற்கொலை செய்த தலித் மாணவர் குடும்பத்துடன் ராகுல் காந்தி சந்திப்பு.. மத்திய அமைச்சர் மீது சாடல்
ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிஹெச்டி மாணவர் ரோகித் வெமுலா குடும்பத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, இன்று சந்தித்தார். ராகுல் வருகையையொட்டி, ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர்.
பாஜக ஆதரவு மாணவர் அமைப்பு மற்றும் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்தது.
இந்நிலையில் விடுதியிலுள்ள தனது அறையில் ரோகித் வெமுலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக செகந்திராபாத் எம்.பியும், மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித்துகள் மற்றும் பாஜக நடுவேயான பிரச்சினையாக இது மாறிப்போயுள்ள நிலையில், ராகுல் காந்தி இன்று ரோகித் வெமுலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பல்கலைக்கழகம் சென்று மாணவர்களிடம் அவர் பிரச்சினைகளை கேட்டார். அதேநேரம், நாங்கள் நீதிக்காக போராட்டம் நடத்திவருகிறோம். இதை காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவேயான மோதலாக நீங்கள் மாற்றிவிடாதீர்கள் என்று ஆதங்கத்தோடு மாணவர்கள் கோரிக்கைவைத்தனர்.
இதையடுத்து பேசிய ராகுல்காந்தி, ரோகித் வெமுலா, நாட்டுக்காக சேவை செய்யவும், தனது அறிவை வளர்க்கவும் இங்கு வந்தார். ஆனால் இப்போது அவர் தற்கொலை செய்துகொள்ள தூண்டப்பட்டுள்ளார்.
ரோகித் தற்கொலை செய்ய இந்த பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் மற்றும் டெல்லியிலுள்ள அமைச்சர் ஒருவரும்தான் காரணம். மாணவன் தற்கொலை செய்த பிறகும், அவரது வீட்டினருக்கு, துணை வேந்தர் ஆறுதல் கூட சொல்லவில்லை. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
ராகுல் வருகையை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தலித் ஆதரவு அமைப்புகள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என கருதியுள்ள ஹைதராபாத் போலீசார் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டி, டிவிட்டரில், கழுகு ராகுல் என்று பொருள்படும் ஆங்கில ஹேஷ்டேக் பாஜக ஆதரவாளர்களால் டிரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.