இந்தி பெல்ட்டில் இந்தி, குலத் தொழிலுக்கு எதிராக 'திராவிட' குரலில் பேசிய ராகுல் .. அதிர்ந்த பாஜக!
ஜெய்ப்பூர்: வட இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இந்திக்கு எதிராக ஆங்கிலம்தான் அவசியமானது; பரம்பரை தொழிலை (குலத் தொழிலை) விட்டு ஏழைகள் வெளியேறுவதை பாஜக விரும்பவில்லை என திராவிடர் இயக்க குரலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பாஜகவினரை அதிர வைத்துள்ளது.
தேசிய கட்சிகளின் தலைவர்கள் பொதுவாகவே இந்தி மொழியில் பேசக் கூடியவர்களாக, இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆதரவு தரக் கூடியவர்களாக இருப்பர். அதிலும் வட இந்தியாவை சேர்ந்த தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் இந்தி திணிப்பில் முழு வீச்சாக இருப்பர்.
மத்தியில் எந்த அரசு ஆட்சி செய்தாலும், இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன; இந்தி நாட்டின் தேசிய மொழி அல்ல என்ற போதும் அதை இந்தியாவின் பொது மொழி அல்லது தேசிய மொழியாகக் கட்டமைக்கிற பணியை கச்சிதமாக மத்திய அரசும் அதன் ஊழியர்களும் செய்கின்றனர். இந்தி மொழிக்காக மத்திய அரசு பெருமளவு நிதி ஒதுக்கீடும் செய்கிறது.
நாடு விடுதலை முன்னர் இருந்தே இந்தி மொழி திணிப்பு என்பது இருந்து வருகிறது. இந்தி மொழி திணிப்பை தமிழகம் மிக உக்கிரமாக எதிர்த்தும் வருகிறது. 1930களில் தொடங்கிய இந்தி எதிர்ப்பு யுத்தமானது தமிழர் நிலத்தில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிரான போர்க்களத்தில் 1938-ல் தாளமுத்து நடராஜன் தொடங்கி 2022-ல் தாழையூர் தங்கவேல் வரை உயிர்த் தியாகம் செய்தவர்கள் பட்டியல் ஏராளம்.. பல நூறு. இந்தி மொழி திணிப்புதான் 1938-ல் தந்தை பெரியாரை தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கவும் வைத்தது. அந்த நெருப்பு இந்தி தெரியாது போடா என்கிற இன்றைய நிலை வரைக்கும் தொடருகிறது.
இந்த நிலையில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, இந்தி திணிப்பை என்றும் எதிர்க்கும் மாநிலங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது, ராஜஸ்தான் மாநிலமும் இந்தி பெல்ட் எனப்படுகிற மாநிலங்களில் ஒன்றுதான். ஆனால் இந்தி பெல்ட் மாநிலத்தில் நின்று கொண்டு இந்தியைவிட ஆங்கிலம்தான் தேவை; இந்தி கற்பதைவிட ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளுங்கள்; ஆங்கிலம் கற்பதால் உலக மக்களுடன் நீங்கள் உரையாட முடியும் என உரத்து பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி தமது பேச்சில், பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்புவதில்லை. பாஜக தலைவர்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கின்றனர். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் குழந்தைகள் ஆங்கிலம் கற்கக் கூடாது என்பதுதான் பாஜக தலைவர்களின் விருப்பம். ஏழை மாணவர்கள் பெரிய கனவு காணக்கூடாது, பரம்பரைத் தொழிலில் (குலத் தொழில்) இருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதுதான் பாஜக தலைவர்களின் எண்ணம். ஏழை மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது. ஆங்கிலம் பயன்படும். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும். அமெரிக்கர்களோடு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அமெரிக்கர்களின் மொழியில் பேச நமது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு 1,700 ஆங்கில வழி பள்ளிகளை திறந்துள்ளது என்றார்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் திராவிடர் தலைவர்களான தந்தை பெரியார் உள்ளிட்டோர் பேசிய பேச்சுதான் இது. இப்போது வட இந்திய தலைவரான ராகுல் காந்தி அதே பேச்சை அச்சு பிசகாமல் இந்தி பெல்ட்டில் நின்று பேசியிருப்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. திராவிடர் இயக்க தலைவர்களின் தீர்க்கதரிசனத்தை மெச்சுவதாக இருக்கிறது. இந்திக்கு எதிராக ஆங்கிலத்தின் பக்கம் நின்று, பாஜகவின் சனாதானத்துக்கு எதிராக குலத் தொழில் கோட்பாட்டுக்கு எதிராக திராவிடத்தின் குரலில் ராகுல் காந்தி பேசியிருப்பது டெல்லியில் பாஜக பெருந்தலைகளை அதிரவே செய்திருக்கிறதாம்.