நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் ராகுல் காந்தி.. வரிந்து கட்டி ஆதரிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசு!
பெங்களூர்: நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வை மிக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, பிசியோதெரபி படிப்புக்கும் நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதேநேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிருந்தன. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயமாகிவிட்டது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வால் தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு பாதிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தும் வருகிறது. இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், பிசியோதெரபி படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதை கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு ஆதரிப்பதாக அம்மாநில அமைச்சர் சரணபிரகாஷ் பட்டீல் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பெங்களூரில் நடைபெற்ற பிசியோதெரபி குறித்த மாநாட்டில் பேசிய அமைச்சர் சரணபிரகாஷ் பட்டீல், மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிசியோதெரபி படிப்புக்கும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். நீட் தேர்வுகள், கல்வியின் தரத்தை உயர்த்துகின்றன என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய துணை சுகாதார ஆணையத் தலைவர் யக்ன சுக்லா, பிசியோதெரபி படிப்புக்கு ஒரே நாடு- ஒரே பாடத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனால் அந்தப் படிப்பின் தரம் உயரும் என்றார்.












Click it and Unblock the Notifications