ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: ஜூன் 27ல் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 27-ம் தேதி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலை, ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலை என்பதற்கான இலக்கணத்தை நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறது.
ரயில்வே மானியக் கோரிக்கை ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பின்கதவு வழியாக பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தியுள்ளது.
2012-ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு ரயில்வே மானிய கோரிக்கைக்கு முன்பு அரசு ரயில் கட்டணத்தை உயர்த்திய போது, நாடாளுமன்றத்தின் மேலாண்மையை குறைக்கின்ற விதமாக கட்டணத்தை உயர்த்தியது என்று விமர்சித்த மோடி இன்றைக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தியது நியாயமா?
நினைவிற்கு எட்டிய வரை பயணிகள் கட்டணம் 14 சதவீதம் என்று இதுவரை உயர்ந்ததாக தெரியவில்லை. ஏற்கனவே விண்ணைத் தொடுகிற விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படும் வேளையில் ரயில் கட்டண உயர்வு மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கும்.
இந்த ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வற்புறுத்துவதோடு, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகராட்சிகளில் 27-ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்".
இவ்வாறு ஞானதேசிகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்