இன்னும் ஏழே ஆண்டுகளில் அனைத்து ரயில்களிலும் பயோ-கழிவறைகள் அமைக்கப்படும்: சதானந்த கவுடா
டெல்லி: இன்னும் 7 ஆண்டுகளில் இந்திய ரயில்கள் அனைத்திலும் பயோ-கழிவறைகள் பொருத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா லோக்சபாவில் இன்று தெரிவித்தார்.
லோக்சபாவில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு சதானந்தகவுடா அளித்துள்ள பதில்: விமானங்களில் உள்ளதைப்போன்ற பயோ-டாய்லெட்டுகளை ரயில்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கழிவுகள் தண்டவாளத்தில் விழுந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
ஏற்கனவே மகாநகரி எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், பண்டல்கண்ட் எக்ஸ்பிரஸ், முசோரி எக்ஸ்பிரஸ், ஆரவள்ளி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் சில கோச்சுகளில் பயோ-கழிவறை பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் ரயில்களில் பயோ-கழிவறைகள் பொருத்த, ரூ.101 கோடி செலவிடப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜூன்வரை, 4356 பயணிகள் பெட்டிகளில், 11 ஆயிரத்து 777 பயோ-கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2021-22ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பயோ-கழிவறை அமைக்கப்படும். இவ்வாறு சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.