மாலை முதல் இரவு வரை விடாமல் தொடர்ந்த மழை.. தத்தளித்த பெங்களூர்!
பெங்களூர்: மாலை முதல் இரவு வரை தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையால் பெங்களூரு மக்களின் இயல்பு வாழ்க்கை ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தை போலவே கடந்த சில நாட்களாக பெங்களூரிலும் வெயில் இயல்புக்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் காலை முதல் மதியம் வரை வெயில் வழக்கம்போல வேலையை காட்டிக்கொண்டிருந்தது. ஆனால், பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு, அரை மணி நேரத்திற்குள் மழை கொட்டத் தொடங்கியது.
விடாது மழை
இந்த மழை அரை மணி நேரத்திலோ, ஒரு மணி நேரத்திலோ விட்டுவிடும் என்று எதிர்பார்த்த பெங்களூர்வாசிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். ஏனெனில், மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை விடாமல் தொடர்ந்தது. சில நேரங்களில் லேசான தூரலாகவும், சில நேரங்களில் பெருமழையாகவும் மாறி மாறி, மாரி பெய்தது.
76 கி.மீ வேகம்
மழை பெய்ய தொடங்கியபோது, பலத்த காற்றும் வீசியதால், நகரின் பல இடங்களிலும் மரங்கள் சாய்ந்தன. இன்று காலை நிலவரப்படி, நகரம் முழுவதும், மொத்தம் 60 மரங்கள் சாய்ந்துள்ளன. பெங்களூரின் வடக்கு பகுதியான எலகங்காவில் காற்று மணிக்கு 76 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது. மத்திய பெங்களூர் பகுதிகளில் அதிகபட்ச காற்றின் வேகம் 54 கிலோ மீட்டரை தொட்டது.
மரங்கள் சாய்ந்தன
எலகங்கா, தாசரஹள்ளி, ஜெயநகர், பனசங்கரி, சஞ்சய்நகர், ஆர்டிநகர், கேஆர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரம் விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அனில்கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் மரம் விழுந்ததால், பிசியான எம்ஜிரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை அவுட்டிங் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் மழையால் அவஸ்தைப்பட்டனர்.
இன்றும் மழை
பானசவாடி, கொடிகேஹள்ளி, எச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை நீடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சூரியன் தனது முகத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளது. இன்றும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை இலாகா தெரிவித்துள்ளது.