காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை.. தமிழகத்திற்கு தண்ணீர் வருமா?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரி என்ற பகுதியில் காவிரி உற்பத்தியாகி, மைசூர், மண்டியா, உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. குடகு மாவட்டத்தின் மடிகேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. மண்டியாவிலும் மழை பெய்துள்ளது. இந்த மழையிலானால் கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி பாசன பகுதிகளில், விவசாய நிலங்களில் தண்ணீர் பாசனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மழை தொடர்ந்தால் தமிழகத்திற்கும் காவிரியில் சிறிது கூடுதல் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அடுத்ததாக சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது, கர்நாடக தரப்பில் எந்த மாதிரியான வாதத்தை முன் வைப்பது என்பது குறித்து அதில் பேசப்பட்டது.
காவிரியில் நீர் வரத்து அதிகரித்தால் நீரை தமிழகத்திற்கு தராமல் இருந்தது ஏன் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வாதம் முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் இதுகுறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.