அட கொடுமையே... ரூ. 510 கோடிக்கு ஏலம் போன ஒயின் ஷாப்.. யார் ஏலம் எடுத்ததுனு தெரிஞ்ச ஆடிப்போயிடுவீங்க
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள ஒயின் ஷாப் ஒன்று சுமார் 520 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை என்பது முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனமே மதுபான விற்பனையை மேற்கொள்கிறது.
ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மது விற்பனை என்பது தனியார் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலும் மதுபான விற்பனையைத் தனியார் துறையே மேற்கொண்டு வருகிறது,
ஒயின் ஷாப் ஏலம்
அங்குள்ள மதுபான கடைகளை அம்மாநில அரசு ஏலம் விடும். யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ, அவர்களே அப்பகுதியில் ஓர் ஆண்டு ஒயின் ஷாப்பை நடத்த முடியும். வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு ஏலம் முறையை ரத்து செய்துவிட்டு, லாட்டரி முறையைக் கொண்டு வந்தது. இருப்பினும், அதில் அதிக முறைகேடு நடப்பதாகக் கூறி அசோக் கெலட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இந்த ஏல நடைமுறையையே மீண்டும் அமல்படுத்தியது.
அடிப்படை விலை
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 7,665 ஒயின் ஷாப்புகளும் இ-ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும். அதன்படி ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ள ஒயின் ஷாப் ஒன்று நேற்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஒயின் ஷாப் கடந்த ஆண்டு 65 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு குறைந்தபட்ச தொகையாக ரூ. 70 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ரூ. 710 கோடிக்கு ஏலம்
நேற்று காலை தொடங்கிய இந்த இ-ஏலத்தில் அந்த குறிப்பிட்ட ஒயின் ஷாப்பை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டினர். இதனால் ஏல தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. நள்ளிரவை தாண்டியும் ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் சுமார் இரண்டு மணியளவில் 510 கோடி ரூபாய்க்கு இந்த ஒயின் ஷாப் ஏலம் கோரப்பட்டது. இது அடிப்படை விலையைவிட 708 மடங்கு அதிகமாகும்.
விதிகள் கூறுவது என்ன
கிரண் கன்வார் என்ற பெண்ணுடன் இணைந்து மற்றொரு பெண் இந்த ஒயின் ஷாப்பை ஏலம் எடுத்துள்ளனர். இந்த ஒரு ஒயின் ஷாப் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போகும் என அமலாக்க துறையினர்கூட எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், தற்போதுள்ள விதிகளின்படி, ஏலம் கோரியுள்ள தொகையில் இரண்டு விழுக்காடு தொகையை அவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஏல தொகை ரத்து செய்யப்படும் என அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர்.