சச்சின் பைலட் பாஜகவுக்கு தாவுகிறார்- கொளுத்திப் போட்ட அப்துல்லா குட்டி- கொடும்பாவி எரித்த காங்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் விரைவில் தங்கள் கட்சியில் இணைவார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அப்துல்லா குட்டியின் கொடும்பாவியை ராஜஸ்தான் காங்கிரஸ் தொண்டர்கள் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் கடந்த ஆண்டு திடீரென போர்க்கொடி தூக்கினர். அத்துடன் ராஜஸ்தானை விட்டு ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறினார் சச்சின் பைலட்.
பின்னர் சச்சின் பைலட்டை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சமாதானப்படுத்தினார். அப்போதே சச்சின் பைலட் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் சில வாக்குறுதிகளை கொடுத்ததால் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் அமைதி காத்து வந்தனர். இதனிடையே மத்திய பிரதேசத்தில் சச்சின் பைலட்டின் நண்பரான ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸுக்கு குட்பை சொல்லிவிட்டு பாஜகவில் இணைந்தார். இப்போது மத்திய அமைச்சராகவும் ஆகிவிட்டார். ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்கு போன போதும் சச்சின் பைலட்டும் விரைவில் கட்சி தாவுவார் என கூறப்பட்டது. ஆனாலும் சச்சின் பைலட் எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.

பஞ்சாப் பஞ்சாயத்து
அண்மையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் கட்சியில் பெரும் அக்கப்போர் எழுந்தது. பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவை நியமிக்க முதல்வர் அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக சோனியா காந்தி வீட்டில் மாத கணக்கில் பஞ்சாயத்து நடத்தப்பட்டு ஒருவழியாக தீர்வு காணப்பட்டது. சித்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவரானார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் அமரீந்தர்சிங்கும் கலந்து கொண்டு சமாதானத்தை வெளிப்படுத்தினர்.

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்
இதனால் அடுத்த நகர்வாக ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு முடிவு கட்ட டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் இரு வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த அமைச்ச்சரவை மாற்றம் எந்த நேரத்தில் நடக்கலாம் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

அப்துல்லா குட்டி பேட்டியால் பரபரப்பு
இந்நிலையில்தான் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக, பா.ஜ.க) தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் எதிர்காலத்தில் சச்சின் பைல்ட் பாஜகவில் இணையலாம் என தெரிவித்திருந்தார். இது ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்துல்லா குட்டியின் இந்த பேட்டி சச்சின் பைலட் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. அமைச்சரவை மாற்றத்தை எதிர்பார்த்து தாங்கள் காத்திருக்கும் நிலையில் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைத்த கதையாக அப்துல்லா குட்டி பேசுகிறாரே என அதிர்ந்து போயினர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள்.

அப்துல்லா குட்டி கொடும்பாவி எரிப்பு
அத்துடன் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சாதிக் செளகான் தலைமையில் அப்துல்லா குட்டியின் உருவபொம்மையை ஜெய்ப்பூரில் எரித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர் காங்கிரஸ் நிர்வாகிகள். இது தொடர்பாக சாதிக் செளகான் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்.-ன் குரலாக அப்துல்லா குட்டி பேசுகிறார். காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் அப்துல்லா குட்டி கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த சதித் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்றார்.












Click it and Unblock the Notifications