லோக்பால் மசோதா நிறைவேற்றம்: ‘வந்தேமாதரம்’ பாடி மகிழ்ந்த அன்னா ஹசாரே
ராலேகான் சித்தி: வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டப் பின்னர் தனது உண்ணாவிரதத்தை கைவிடுவேன் எனத் தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லி ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட்டதற்கு மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.
காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவரது உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால், இம்முறை தனது நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர இருப்பதாக உறுதிமொழியுடன், தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி பகுதியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார் ஹசாரே.
நேற்று அவரது உண்ணாவிரத போராட்டத்தின் 8வது நாள். இந்நிலையில் டெல்லி ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேறியதை உண்ணாவிரத மேடையில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருந்த அன்னா ஹசாரே மகிழ்ச்சி அடைந்தார்.உடல் மெலிந்த நிலையில் இருந்த அவரது முகம் பூரிப்பு அடைந்தது. தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘வந்தே மாதரம்' பாடலை பாடினார். அப்போது முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பெடி உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-
நன்றி....
லோக்பால் மசோதா டெல்லி ராஜ்ய சபாவில் நிறைவேறி விட்டது. சமாஜ்வாடி கட்சி தவிர ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புரட்சி நடவடிக்கை...
இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை. கடந்த 40 ஆண்டுகளில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் 8 தடவை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒரு தடவையும் நிறைவேறவில்லை.தற்போது ராஜ்யசபாவில் நிறைவேறியதை போல, நாடாளுமன்றத்தில் நாளை (இன்று) மசோதா நிறைவேறும் என்று நம்புகிறேன்.
உண்ணாவிரதம்...
சுமுகமான முறையில் மசோதா நிறைவேற அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு உண்ணாவிரதத்தை கைவிடுவேன்.
நாடே விரும்புகிறது....
லோக்பால் மசோதா எனது கோரிக்கை மட்டும் அல்ல. இந்த மசோதா நிறைவேற நாடே விரும்புகிறது. ஊழலுக்கு எதிரான சட்டத்தை மக்கள் விரும்புவதை நமது தலைவர்கள் உணர தொடங்கி உள்ளனர்.
குறையும் ஊழல்....
இந்த சட்டம் மூலம் 100 சதவீத ஊழல் ஒழியும் என்று நான் கூறவில்லை. 40 முதல் 50 சதவீத லஞ்சம், ஊழல் நிச்சயம் ஒழியும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று ஹசாரேவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.