இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்! கர்ப்பகிரஹ பணியை துவக்கி யோகி ஆதித்யநாத் பெருமை
அயோத்தி: அயோத்தியில் கட்டும் ராமர் கோவில் இந்தியாவின் தேசிய கோவிலாக இருக்கும். அதோடு இந்தியாவின் ஒற்றுமையை உணர்த்தும் வகையிலும் இருக்கும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். கோவிலில் கர்ப்பகிரஹ பணியை துவக்கி வைத்தபிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் சட்ட பிரச்சனைகள் இருந்தன. இந்த பிரச்சனைகள் உச்சநீதிமன்றம் மூலம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2020ல் அரசு சார்பில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா (SRJBTK) எனும் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
கிழக்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்வு! 63 இந்து குடும்பங்களுக்கு வீடு, நிலம் வழங்கிய யோகி
அடிக்கல் நாட்டிய பிரதமர்
மேலும் கோவிலுக்கான கட்டுமான வரைபடம் தயாரிக்கப்பட்டது. 110 ஏக்கரில் பிரம்மாண்டமாக கோவில் அமைய உள்ளது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர்கோவில் கட்ட அடிக்கடி நாட்டினார். இதையடுத்து பணிகள் துவங்கியது. மொத்தம் ரூ.1000 கோடி செலவில் பிரம்மாண்டமாக கோவில் அமைய உள்ளது.
கர்ப்பகிரஹ பணி
இதையடுத்து கட்டுமான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமர் கோவிலில் கர்ப்பகிரஹ பணிக்கான பணியை இன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். அதாவது கர்ப்பகிரஹத்தில் இடம்பெறும் கல்லை யோகி ஆதித்யநாத் நிறுவினார். அதன்பிறகு அவர் பேசியதாவது:
தேசியக்கோவிலாக..
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கி வைத்தார். பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. கர்ப்பகிரஹத்தில் கற்கள் வைக்கும் சடங்கு இன்று நடந்தது. இதில் நான் பங்கேற்றது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்தியாவின் தேசிய கோவிலாக ராமர் கோவில் இருக்கும். இந்த நாளுக்காக மக்கள் நீண்ட காலம் காத்துள்ளனர். ராமர் கோவில் இந்தியாவின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.
பீடம் அமைக்கும் பணி
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பிறகு ராமர்கோவில் கட்டும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. 2022 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட கிரானைட் கற்களால் பீடம் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பீடத்தில் மொத்தம் 17 ஆயிரம் கற்கள் இடம்பெற உள்ளன. இந்த பணி ஆகஸ்ட் 2022க்குள் நிறைவடைய உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
3 நிலைகளில் பணி முடிப்பு
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‛‛கோவிலை 3 நிலைகளில் கட்டி முடிக்க உள்ளோம். 2023ம் ஆண்டுக்குள் கர்ப்பகிரஹ பணி, 2024ல் கோவிலின் முழுமையான கட்டுமானம், 2025ம் ஆண்டுக்குள் கோவில் வளாகத்தில் முக்கிய கட்டுமானங்களை முடிக்க உள்ளோம்'' என்றார். கட்டுமானத்துக்கான கிரானைட் கற்கள் ஆந்திரா, கர்நாடகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு வருகிறது.
2023ல் மக்களுக்கு அனுமதி
மேலும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக ராமர்கோவில் பணியை முழுவதுமாக முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 2023ம் ஆண்டு டிசம்பரில் கோவிலில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கும் நோக்கத்தில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.