"உங்கள் தாயை கொடுமைப்படுத்தாதீர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்": மோடிக்கு காங். தலைவர் கடிதம்
டெல்லி: உங்கள் அம்மாவை உங்களால் சரியாக கவனிக்க முடியாவிட்டால், நான் பார்த்துக் கொள்கிறேன் என மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரஷித் ஆல்வி கடிதம் எழுதியுள்ளார்.
அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை ஆதரித்து பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, நேரு குடும்பம், அதிகாரத்தை தங்கள் கைகளிலேயே வைத்துக்கொள்ள விருப்பப்படுகிறது என்றும், ஆனால் எனது தாயார் முதிய வயதிலும் ஆட்டோவில் வந்து வாக்களித்தார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மோடிக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷித் ஆல்வி, கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வீட்டு வேலை செய்து உங்கள் அம்மா உங்களை வளர்த்துள்ளார். அவர்கள் கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், இன்று பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் ஆக்கியுள்ளனர்.
ஆனால், உங்களால் அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியவில்லை. ஒரு மாநில முதல்வரான உங்களின் அம்மா எட்டுக்கு எட்டு அளவிலான சிறிய அறையில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை கொடுத்துள்ளது.
உங்கள் அம்மாவை உங்களால் சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் அம்மா எனது தாயைப் போன்றவர்தான். நீங்கள் அனுமதித்தால், என்னால் முடிந்த அளவு நல்ல வசதியை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.