ரேஷன் ஊழல்: மமதா பானர்ஜியின் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அமலாக்கத்துறையால் அதிகாலையில் அதிரடி கைது!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா ( ஜோதி பிரியா) மல்லிக் ரேஷன் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார் ஜோதிப்ரியா மல்லிக். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு செய்தார்; அதில் சட்டவிரோத பணப் பரிப்பாற்றம் நடந்தது என்பது ஜோதிப்ரியா மல்லிக் மீதான அமலாக்கத்துறை வழக்கு.

ஜோதிப்ரியா மல்லிக் மீதான இந்த வழக்கில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில் இந்த சோதனைகள் நடைபெற்றன. அவரது உதவியாளர் உள்ளிட்ட 8 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.
இந்த விசாரணைகளுக்குப் பின்னர் இன்று அதிகாலையில் ஜோதிப்ரியா மல்லிக், அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிப்ரியா மல்லிக் , மிகப் பெரிய சதிக்கு பலிகடாவாக்கப்பட்டுள்ளே என குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மமதா பானர்ஜி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வழக்குகளை பலரும் எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு அமைச்சரான ஜோதிப்ரியா மல்லிக் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டு கூடுதல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications