ராகுல் காந்தி VS பிரியங்கா.. சகோதரனை விஞ்சி சாதித்த 'சிங்கப்பெண்!' குஜராத், இமாச்சல் சொல்லும் பாடம்
காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்திருக்கும் படுதோல்விக்கு ராகுல் காந்தியின் மெத்தனப்போக்கும், அம்மாநில காங்கிரஸாரின் சோம்பேறித்தனமும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதே சமயத்தில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அடைந்திருக்கும் வெற்றிக்கு பின்னால் பிரியங்கா காந்தியின் கடின உழைப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ராகுல் காந்தியின் இந்த அலட்சியப்போக்கை பார்க்கும் போது, பிரதமர் நரேந்திர மோடி முன்பு ஒரு முறை கூறிய வார்த்தை, ராகுலுக்கு எவ்வுளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
பிரியங்காவின் ‛பக்கா’ ஸ்கெட்ச்.. இமாச்சலில் பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்.. வெற்றியின் ரகசியம் இதுதான்!
குஜராத்தின் 'சிங்கம்' என நிரூபித்த பாஜக
இந்தியாவே எதிர்பார்த்த குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையை பார்க்கும் போதே கிட்டத்தட்ட முடிவுகள் தெரிந்துவிட்டன. மதிய நிலவரப்படி, குஜராத்தில் மொத்தமுள்ள 181 தொகுதிகளில் 157-இல் பாஜக முன்னிலையில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸோ வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதாவது பாஜக முன்னிலையில் இருக்கும் தொகுதிகளில் மூன்றில் ஒரு சதவீதம் கூட காங்கிரஸ் வரவில்லை. அதே சமயத்தில், புதிதாக களம் கண்ட ஆம் ஆத்மியோ 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.
ராகுலின் மெத்தனத்துக்கு கிடைத்த தோல்வி
குஜராத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கும் காங்கிரஸ், இமாச்சலப் பிரதேசத்தில் அழுத்தமான வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரே சமயத்தில் நடைபெற்ற இந்த இரண்டு தேர்தல்களில், ஒன்றில் வெற்றியையும், ஒன்றில் படுதோல்வியையும் காங்கிரஸ் பெறுவதற்கு என்ன காரணம்? இந்தக் கேள்விக்கு ஒரே பதிலாக அரசியல் நிபுணர்கள் சொல்வது 'உழைப்பு' என்ற வார்த்தையை தான். இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் சூறாவளி பிரச்சாரம் காரணம் என்றால், குஜராத்தில் அக்கட்சி அடைந்திருக்கும் தோல்விக்கு ராகுல் காந்தியின் அலட்சியப்போக்கும், மெத்தனமும்தான் காரணம் என் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களே கூறுகிறார்கள்.
2017 தேர்தல் உணர்த்திய பாடம்
கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கொடுத்த உழைப்பு ஏராளம். அந்த சமயத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் தனது ஆளுமையை நிரூபிக்க முழு பலத்துடன் குஜராத்தில் களமிறங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டார் ராகுல். ராகுல் காந்தி நேரடியாக வந்ததால் மாநில காங்கிரஸ் தலைவர்களும் உற்சாகமாக களப்பணி ஆற்றினர். குஜராத்தின் ஒவ்வொரு தெருவிலும் ராகுல் காந்தியின் கால்தடம் பதிந்தது என்று சொல்லுமளவுக்கு அவரது பிரச்சாரம் இருந்தது. அந்த உழைப்புக்கு பலனும் கிடைத்தது. அத்தேர்தலில் 78 தொகுதிகளை கைப்பற்றியது காங்கிரஸ். பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும், அக்கட்சிகளுக்கு இடையேயான வாக்கு சதவீதம் மிகக்குறைவாகவே இருந்தது. மோடி அலை சுனாமி போல இருந்த காலத்தில் கூட, உழைப்பை கொடுத்தால் அதற்கான பலனை கொடுக்க மக்கள் தவற மாட்டார்கள் என அன்றைய தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு உணர்த்தியது.
உழைக்க மறந்த ராகுல் காந்தி..
ஆனால், இந்த தேர்தலிலோ ராகுல் காந்தி என்ன செய்தார்? மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் குஜராத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில், மகாராஷ்டிராவில் பாத யாத்திரை சென்று கொண்டிருந்தார். குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் வற்புறுத்தியதால், ஒரே ஒரு முறை குஜராத்துக்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராகுல். ராகுலின் இந்த அலட்சியப்போக்கை கண்ட குஜராத் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஒருவித சலிப்பு ஏற்பட்டது. அவர்களும் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இன்னும் சொல்லப்போனால், குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் எங்கே என்று தேடும் அளவுக்குதான் அக்கட்சியின் களப்பணி இருந்தது. இந்த மெத்தனப்போக்கே தற்போது குஜராத்தில் காங்கிரஸை தேடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.
மோடி சொன்ன ராகுலுக்கான "வார்த்தை"..
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அமர்ந்த தருணம். அப்போது அவரது 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் போது மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்வி. "உங்கள் மீது பலரும் பலவிதமாக விமர்சனங்களை வைக்கிறார்கள்.. திட்டுகிறார்கள்.. அப்படியிருக்கும் போதும், உங்களால் எப்படி தொடர்ந்து வெற்றிகளை பெற முடிகிறது?" இதற்கு பதிலளித்த மோடி, "என் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன. நான் கெட்டவன் என்று கூட பலர் சொல்வார்கள். ஆனால் என் எதிரிகள் கூட, என்னை சோம்பேறி என்று சொல்ல மாட்டார்கள். உழைப்பாளி என்றே சொல்வார்கள். உழைப்பு என்றைக்கும் ஒருவரை கைவிடாது" என்றார். மோடி சொன்ன அந்த வார்த்தையை ராகுல் காந்தி சீரியசாக எடுக்க வேண்டியது அவசியம்.