உ.பி. மெயின்புரியில் மாட்டிறைச்சி வதந்தியால் வன்முறை: பா.ஜ.க, சமாஜ்வாடியினருக்கு தொடர்பு!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தாத்ரியைத் தொடர்ந்து மெயின்புரியிலும் மாட்டிறைச்சி வதந்தியை கிளப்பிவிட்டு வன்முறையை தூண்டிவிட்ட சம்பவத்தில் பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி கட்சியினருக்கு தொடர்பிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உ.பி.யின் தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சியை சாப்பிட்டார் என்ற வதந்தியை கிளப்பிவிட்டு இக்லாக் என்ற இஸ்லாமிய முதியவரை மதவெறிக் கும்பல் அடித்தே படுகொலை செய்தது. இச்சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் உ.பி.யின் மெயின்புரி கார்கால் கிராமத்தில் மாடு ஒன்றை இறைச்சிக்காக வெட்ட ஒருவர் கடத்திச் சென்றதாகவும் அந்த நபரின் வீட்டில் மாட்டுத் தோல் இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வதந்தி காட்டுத் தீயாக பரவியது.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அப்பகுதி பாரதிய ஜனதா தலைவர் ராகேஷ் சாண்டெல் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் நூற்றுக்கணக்கான பா.ஜ.க.வினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி சமாஜ்வாடி கட்சி கவுன்சிலர் மகன் அவ்னீஷ் குமார், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எஸ்.கே. யாதவின் சகோதரர் டிடு யாதவ் ஆகியோரும் வன்முறைச் சம்பவங்களைத் தூண்டியதாக தெரியவந்துள்ளது. இதில் அவ்னீஷ் குமார் மட்டும் போலீசில் சிக்கியிருக்கிறார். டிடு யாதவை போலீசார் தேடி வருகின்றனர்.