ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் திடீர் விலகல்
டெல்லி: ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் விலகியுள்ளார்.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அரசு உத்தரவுப்படி அந்த ஆலைக்கு கடந்த மே 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தனர். இதை எதிர்த்து வேதாந்தா குழுமம், டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஸ்டெர்லைட்டால் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், அந்த குழுவில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், குழுவில் இருந்து விலகுவதாக வசீப்தர் தெரிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஆய்வு குழு அமைக்கும் தேசிய பசுமை தீர்ப்பாய முடிவை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வசீப்தர் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று நடந்த வாதத்தில், "தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், சமூக விரோதிகள் என்று தமிழக அரசே கூறியுள்ளது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். எங்கள் ஆலையில் பணிபுரியும், 2,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க முடியும். இருப்பினும் செய்யவில்லை. இனிமேலும் தாமதிக்க முடியாது. தினமும் ரூ.5 கோடி வரை ஸ்டெர்லைட் ஆலையில் இழப்பை சந்தித்து வருகிறோம் என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று, வேதாந்தா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.