மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி...போராட்டத்தை தொடரும் என ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அறிவிப்பு
டெல்லி : ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தப்படுத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தங்களது இதர கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை தொடரப் போவதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 1996-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள், 1996-2005 வரை, 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்கள் என பிரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 2008-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் அதிக ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குற்றச்சாட்டு.
இதனால் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை 2014-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏற்றுக்கொண்டு இடைக்கால பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்தார்.
இதற்காக ரூ.500 கோடி ராணுவ ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் 2014-15-ல் இது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 84 நாட்களாக நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் பிரதிநிதிகளாக சிலர் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கரை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்விளைவாக, ஒரே தகுதி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேற்றைய பேச்ச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறியதாவது...
மிகுந்த நிதி நெருக்கடிக்கு இடையிலும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 2013-ம் ஆண்டை அடிப்படை தேதியாக வைத்து, 1-7-2014 முதல் கணக்கிட்டு புதிய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை, இந்த ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்படும்.
கடந்த நிலுவை காலத்துக்கான திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை அமல்படுத்துவதன் மூலம் மட்டும் மத்திய அரசுக்கு 10 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும். விருப்ப ஓய்வு பெற்ற வீரர்கள் இந்த சலுகையை பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளில் ஒரேயொரு கோரிக்கையை மட்டுமே மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதர கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் எனவும் இந்த போராட்டத்தை முன்நின்று நடத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவரான ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் அறிவித்துள்ளார்.