மத வன்முறை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை! மத மோதல் தடுப்பு மசோதா சொல்வது என்ன?
டெல்லி: மத மோதல் தடுப்பு மசோதா நிறைவேறினால் அதில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
மத மோதல் தடுப்பு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. நாட்டில் மத ரீதியாக நடைபெறும் மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மசோதாவுக்கு ஜெயலலிதா உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதில் மத்திய அரசு திருத்தங்கள் செய்துள்ளது.
எதிர்ப்புகள் காரணமாக, மத்திய அரசு பணிந்தது. வரைவு மசோதாவில் திருத்தங்கள் செய்ய முன்வந்தது. முந்தைய மசோதாவில், கலவரம் ஏற்பட்டால் பெரும்பான்மை சமூகத்தினரே பொறுப்பு என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், எல்லா மதத்தினருக்கும் நடுநிலையை கடைபிடிக்கும் வகையில், இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநில அரசுகள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் சட்டப்பிரிவு கைவிடப்பட்டுள்ளது.
அதாவது, எந்த மாநிலத்திலாவது மத கலவரம் நடந்தால் கலவரத்தை ஒடுக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாகவே துணை ராணுவப்படைகளை அனுப்பலாம் என்று முந்தைய மசோதாவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, மத கலவரத்தை ஒடுக்க மத்திய அரசின் உதவி தேவை என்று சம்பந்தப்பட்ட மாநில அரசு கருதினால், படைகளை அனுப்ப மத்திய அரசின் உதவியை கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.
இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
மத வன்முறையின்போது, கடமை தவறும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தின்போது, மாநில அரசு அதிகாரிகள் செயல்பட தவறினாலோ, அவர்களின் மெத்தனத்தால் நிலைமை மோசமானாலோ அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.
மத கலவரத்தை தூண்டுவோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். திட்டமிட்ட மத வன்முறைக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிரவாதிகளுக்கு நிதிஉதவி அளிப்போருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
கடமை தவறிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு முதல் 5 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
கலவரத்தில் கொல்லப்படும் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சமும், பலாத்காரத்துக்கு ரூ.5 லட்சமும், இதர பாலியல் குற்றங்களுக்கு 4 லட்சமும், நிரந்தர ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், பகுதி அளவுக்கு ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், கொடுங்காயத்துக்கு ரூ.2 லட்சமும், ஆள்கடத்தலுக்கு ரூ.2 லட்சமும், மனநிலை துன்புறுத்தலுக்கு ரூ.3 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும்.