சுதந்திர தினத்தன்று தீக்குளிப்பேன்... உண்ணாவிரதம் இருக்கும் லாலு கட்சி எம்.எல்.ஏ மிரட்டலால் பரபரப்பு
பாட்னா: பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, உண்ணாவிரதம் இருந்து வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ., சுதந்திர தினத்தன்று தீக்குளித்து சாகப்போவதாக விடுத்துள்ள மிரட்டலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள போஜ்பூர் மாவட்டம் ஜெகதிஷ்பூர் தொகுதி எம்.எல்.ஏ. தினேஷ் குமார் சிங். இவர் பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல்வரின் அலுவலகத்திற்கு வெளியே நேற்று தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதத்தை கைவிட மறுத்த அவரை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கிருந்தபடி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார் தினேஷ்குமார் சிங்.
இந்நிலையில், நாளைக்குள் தனது கோரிக்கையை ஏற்று பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்காவிட்டால், சுதந்திர தினத்தன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். மழை இல்லாததால் விவசாயிகள் இந்த பருவத்தில் நெல் நடவு செய்யவில்லை. ஆனால், அவர்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை.
பீகார் மாநிலத்தின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துள்ளது. ஆனால் அரசோ விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்தைப் பற்றி கவலைப்படவில்லை. விவசாயிகள் அழுதுகொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் பசியால் வாடுகின்றன. அவர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.