குண்டூர்: சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளை தாக்கி நகை கொள்ளை
குண்டூர்: குண்டூர் அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டு சென்றது.
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே செல்லும் போது மர்ம ஆசாமிகள் சிலர் எஸ்-7, எஸ்-9, எஸ்-10 ஆகிய பெட்டியில் புகுந்து தூங்கிக் கொண்டு இருந்த பயணிகளை கத்தி முனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.
பெண்களிடம் இருந்து நகையை பறித்தனர். மேலும் ஆண் பயணிகளின் செல் போன், லேப்-டாப் மற்றும் பணத்தை பிடுங்கினர்.
பொருட்களை தரமறுத்த பயணிகளை தாக்கினர். பின்னர் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி அவர்கள் தப்பி விட்டனர்.
சுமார் 15 பயணிகள் 50 பவுன் நகை மற்றும் பொருட்களை இழந்து உள்ளனர். ரயில் செகந்திரபாத் வந்து அடைந்ததும் பயணிகள் ரயில்வே போலீசில் புகார் செய்தனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அந்த ரயிலில் பயணம் செய்தவர்களா? அல்லது வழியில் ஏறியவர்களா? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ரயிலில் நடைபெறும் கொள்ளைச் சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.