அதெப்படி மோடியை 'வாய்சவடால்' நபர் என விமர்சிக்கலாம்? சோனியா மீது ஸ்மிருதி இரானி பாய்ச்சல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை "வாய்சவடால்" நபர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, லோக்சபா தேர்தலின் போது அளித்த எந்த ஒரு உறுதிமொழியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை. எல்லாம் காற்றில் எழுதப்பட்ட உறுதிமொழிகள்தான் என கடுமையாக சாடியிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதில்:
எங்களைப் பார்த்து வாய்சவடால்காரர்கள என சொல்பவர்கள் முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்தை நிதி நிலைமையை காரணம்காட்டி நிறுத்தினார்கள். ஆனால் இந்த பிரச்சனையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டியிருப்பவர் பிரதமர் மோடி.
அண்மையில் நாகா தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டதே.. அது வெறும் வாய்சவடால்தானா? பிரதமர் மோடியை சோனியா காந்தி விமர்சிப்பதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை.. ஏனெனில் ஒட்டுமொத்த இந்திய மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள்..
கட்சியின் தலைவராக ராகுலை காந்தியை காங்கிரஸால் நியமிக்க முடியாமல் போனது ஏன்? என்பது காங்கிரஸ் கட்சியினர் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.