ரூ.100 கோடி அபராதம் அதிகார விதியை மீறியது; வழக்கு செலவு என்னிடம் கேட்பதா?: ஜெயலலிதா அப்பீல்
பெங்களூர்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். ரூ.100 கோடி அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் ஜெயலலிதா தனது மேல் முறையீட்டு மனுவில் கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மேல் முறையீட்டு மனுவில் ‘‘வழக்கு விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. சொத்து மதிப்பு கணக்கீடு அதிகமாக காட்டப்பட்டுள்ளது'' என்பது உள்பட பல்வேறு அம்சங்களை ஜெயலலிதா சுட்டிக்காட்டி உள்ளார்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். ரூ.100 கோடி அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் ஜெயலலிதா தனது மேல் முறையீட்டு மனுவில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா தனது மேல்முறையீட்டு மனுவில் மேலும் கூறி இருப்பதாவது:
அசாதாரணமான தீர்ப்பு
என் மீதான குற்றச்சாட்டுக்களில் தீர்ப்பளித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எனக்கு 100 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளார். இது ஒரு அசாதாரணமான தீர்ப்பாகும். இதுவரை நடைமுறையில் இல்லாதது.
இருமடங்கு அபராதம்
மற்றொரு வகையில் பார்த்தால் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதம் முற்றிலும் அதிகார விதிகளை மீறிய ஒன்றாகும். ஏனெனில் என் மீது ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் அதற்கு இரு மடங்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரத்து செய்ய வேண்டும்
இந்த வழக்கில் நீதிபதி இப்படி ஒரு அபராதத்தை விதித்து உத்தரவிட முடியாது. இது சட்ட அதிகார விதிகளை மீறியதாக உள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
நீதிபதிக்கு வெறுப்பு
எனக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது, என் மீது விரோதமும், கடும் வெறுப்பையும் நீதிபதி கொண்டிருப்பதையே காட்டுவதாக உள்ளது. அவர் ஒரு நோக்கத்துடன் இல்லாவிட்டாலும், அவர் உத்தரவு இதையே காட்டுகிறது.
நீதிபதிக்கு அதிகாரமில்லை
மேலும் ரூ.100 கோடி அபராதத் தொகையை எப்படி செலுத்துவது என்று உத்தரவிடுவதிலும் நீதிபதி தவறு செய்துள்ளார். அபராதத் தொகை எப்படி செலுத்தப்பட வேண்டும் என்று கூற அவருக்கு அதிகாரம் இல்லை.
என்னுடைய பணமில்லை
சொத்து குவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பெரும்பாலான நிரந்தர வைப்பு முதலீடுகள் என்னால் செய்யப்பட்டவை அல்ல. என்னிடம் பெரிய அளவில் பணம் கை இருப்பும் இல்லை.
சட்ட ரீதியாக தவறு
அவையெல்லாம் வேறு நபர்கள் பெயர்களில் உள்ளது. அப்படி இருக்கும் போது நான் மட்டுமே ரூ.100 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது சட்ட ரீதியாக சரியானது அல்ல.
7040 கிராம் தங்கம்
மேலும் 7040 கிராம் தங்கம் எனக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீதிபதி தன் தீர்ப்பில் அந்த தங்கத்தை பற்றி குறிப்பிடவே இல்லை. அப்படி இருக்கும் போது ரூ.100 கோடி அபராதத் தொகை, அந்த தங்க நகைகளில் இருந்து ஈடுகட்ட முடியும் என்று எப்படி சொல்ல முடியும்?
ரூ.5 கோடி செலவு
என் மீதான வழக்கு பெங்களூர் சிறப்புக் கோர்ட்டில் நடத்தப்பட்டதற்கு கர்நாடக அரசு ரூ.5 கோடி செலவு செய்திருப்பதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறி உள்ளார். இந்த 5 கோடி ரூபாய் செலவை நான் கர்நாடக அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தவறான தீர்ப்பு
இது தவறான தீர்ப்பாகும் இந்த உத்தரவில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒரு போதும் செலவுத் தொகையை பெற முடியாது.
மேலும் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தெளிவாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்கு எதிராக உள்ளது என்று ஜெயலலிதா தன் மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.