உ.பி. தொகுதி வளர்ச்சி நிதி: 1 ரூபாய் கூட செலவு செய்யாத மோடி, சோனியா, ராகுல்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தொகுதி வளர்ச்சி நிதியாக ரூ. 200 கோடி அளிக்கப்பட்டும் அதிலிருந்து ஒரு சதவீதம் கூட செலவிடப்படவில்லை. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கியத் தலைவர்கள் யாரும் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்துதான் நாடாளுமன்றத்துக்கு அதிகபட்சமாக 80 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, இம்மாநிலத்துக்கு அளிக்கப்படும் தொகுதி வளர்ச்சி நிதியும் மிக அதிகம். ஆண்டுக்கு ஒரு எம்.பி.க்கு தலா ரூ.5 கோடி அளிக்கப்படும். இதில் முதல் கட்டமாக தலா ரூ 2.5 கோடி என்ற அளவில் மொத்தம் ரூ.200 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையில் சீத்தாப்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ராஜேஷ் வர்மா மட்டும் ரூ.6 லட்சம் செலவிட்டுள்ளார். மீதமுள்ள ரூ. 199.94 கோடி செலவிடப்படவேயில்லை.
மத்திய புள்ளியியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரியவந்துள்ளது. வாரணாசி எம்.பி.யான பிரதமர் மோடி, லக்னோ எம்.பி. ராஜ்நாத் சிங், ரேபரேலி எம்.பி. சோனியா காந்தி, அமேதி எம்.பி. ராகுல் காந்தி, ஆசம்கர் எம்.பி. முலாயம்சிங் யாதவ், கன்னோஜி எம்.பி.யும் முதல்வர் அகிலேஷின் மனைவியுமான டிம்பிள் யாதவ், உட்பட யாருமே தங்களது தொகுதி வளர்ச்சி நிதியில் 1 ரூபாயைக் கூட பயன்படுத்தவேயில்லை.
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இதை விட மோசமான நிலையே நிலவுகிறது.