ஹைதராபாத்தில் கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.7 கோடி!
ஹைதராபாத்தில் கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கிக்கணக்கில் 7 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வருமான வரியை செலுத்துவதாக அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கிக்கணக்கில் 7 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வருமான வரியை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சிலர் அதனை வெள்ளையாக்க அப்பாவி பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 7 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதனைக் கண்டுபிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது 7 கோடி ரூபாய் வருமானத்திற்கு வரி செலுத்தி விடுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும் ஓட்டுநரான அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. யார் அளித்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.