பாகிஸ்தான், வங்கதேசமும் இந்து நாடுகளே: ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வம்பு பேச்சு
மதுரா: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இந்துக்களின் தேசம்தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட மோகன் பகவத் கூறியதாவது:
ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியா என்பது இந்து நாடு என்ற நம்பிக்கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது.
சில மக்கள் தங்களை இந்துக்கள் என சொல்கின்றனர். சிலர் இந்தியன் என சொல்கின்றனர். இன்னும் சிலர் தங்களை ஆரியர்கள் என்றும் சிலர் உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர்.
இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று ஏற்றுக்கொண்டாலும் எந்த மாற்றமும் இதில் ஏற்படாது. இந்திய துணைக்கண்டத்தில் வாழும் அனைவருமே இந்துநாட்டை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வேறுபட்ட குடியுரிமையை கொண்டிருந்தாலும் அவர்களுடைய நேஷனாலிட்டி இந்துதான்.
சிந்து நதி இங்கு ஓடியதால் அரபு மன்னர்கள் இந்த பகுதியை இந்து என அழைக்க தொடங்கினர். பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 ல் வங்காளதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மக்களின் குடியுரிமை மாறுவதற்கு பிரிக்கப்பட்டதே காரணம். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளையோ நாடுகளையோ விட்டு செல்லவில்லை. எனவேதான் அவர்களின் நேஷனாலிட்டி இன்னும் மாறவில்லை என்று நான் கூறுகிறேன்.
சில மக்கள் தெளிவில்லாமல் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லீம்கள் எனவும் கூறிக்கொள்கின்றனர். இந்த நிலப்பரப்பின் பழங்கால பெயர் இந்துஷ்தான். வெளிப்படையாகவே இங்கு வாழும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்துக்களே
இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
மதுராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்ட அதன் தலைவர் மோகன் பகவத், ஒரே இந்து நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியா என்பது இந்து நாடு என்ற நம்பிக்கையை எந்த விலை கொடுத்தாலும் மாற்ற முடியாது.