ஜெயலலிதாவுக்கு ஏன் சிறை தண்டனை கிடைத்தது தெரியுமா? வதந்திகளும், உண்மைகளும்!
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அது தொடர்பாக ஏகப்பட்ட யூகங்கள், புரளிகள், வதந்திகள் கிளப்பிவிடப்படுகின்றன. சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும், இதுபோன்ற வதந்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டு வருகின்றன.
தமிழக மக்கள் எப்போதுமே சென்டிமென்டானவர்கள். எனவே ஜெயலலிதா சிறை சென்றுள்ளதால், அவருக்கு எதிராக கருத்து கூறியவர்களும், இப்போது அனுதாபம் காட்டுகின்றனர். இதனால் அனுதாப அலை அதிமுகவுக்கு ஆதரவாக வீசுவதை தமிழகத்தின் பல பகுதிகளிலும் பார்க்க முடிகிறது.
ஆனால் வீண் வதந்திகள், மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கிவிடும் சக்தி மிக்கவை. தீயை விட வேகமாக பரவக்கூடிய அந்த வதந்திகள், என்னென்ன, அவற்றில் உண்மையுள்ளதா என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
காவிரி பிரச்சினை
ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு காரணம், காவிரி பிரச்சினையில் அவர் காட்டிய உறுதிதான். இதனால்தான் கர்நாடக அரசு மிகுந்த கண்டிப்புடன் இந்த வழக்கை நடத்தி வருகிறது என்பது முக்கியமான வதந்தி. இந்த கூற்று அரசியலுக்கும், மாநில மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமானால் பயன்படுமே தவிர, அதில் உண்மையில்லை. ஒருவேளை, ஆந்திரா, கேரளா என எங்கு வழக்கு நடந்திருந்தாலும், அந்த மாநிலங்களுடன் தமிழகத்துக்கு உள்ள நதிநீர் பிரச்சினை ஒப்பிட்டு நீதி அமைப்பு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.
எடியூரப்பாவுக்கும் இதுதான் கதி
கர்நாடகாவில், சதானந்தகவுடா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கும்போது, அதே கட்சியை சேர்ந்த மக்கள் ஆதரவு பெற்ற தலைவரான எடியூரப்பா 21 நாட்கள் இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த அளவுக்கு நீதித்துறை சுதந்திரம் மிக்கதாக உள்ளது.
வெளிநாட்டு சதியோ?
இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் போட்டது, மீனவர் பிரச்சினைக்காக மோடிக்கு கடிதம் எழுதியது போன்றவற்றால், இலங்கை அதிபர் ராஜபக்சே தனது நண்பர் சுப்பிரமணியன் சுவாமியை பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு போட்டுவிட்டார் என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது. இதில் இலங்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை ஜெயலலிதா எடுத்ததை அனைத்து தரப்புமே ஏற்றுக்கொள்ளும். ஆனால் வழக்கு தொடரப்பட்ட காலத்திற்கும், இந்த நடவடிக்கைகளுக்கும் எள்ளளவும் சம்மந்தம் கிடையாது என்பதால் இதுவும் புரளியே.
சக்தியாக உருவெடுத்தார்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பிக்களுடன் வெற்றி பெற்றது அதிமுகதான். எனவே, பாஜகவே சதி செய்து, ஜெயலலிதாவை சிக்க வைத்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறு கூறுவது நீதிமன்றத்தை மதிக்காததை போல ஆகிவிடும். வழக்கில் கிட்டத்தட்ட வாத, விவாதங்கள் முடிந்து தீர்ப்பு கூறும் தேதி நெருங்கிய நிலையில்தான் மக்களவை தேர்தல்கள் நடந்து முடிந்தன. எனவே அதன்பிறகு ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு நினைத்தால் கூட ஜோடிக்க முடியாது, அதற்கான வாய்ப்பும், நேரமும் நீதிமன்றத்தில் இல்லை.
சிமென்ட் லாபி
இந்த வதந்தியை பரப்பியவர்களே சிரித்திருப்பார்கள். அதாவது, அம்மா சிமென்ட் என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடக்கியதால், சிமென்ட் கம்பெனி உரிமையாளர்கள் சேர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்து விட்டார்கள் என்பதுதான் அந்த வதந்தி. அம்மா சிமென்ட் திட்டம் தொடங்கியது, செப்டம்பர் 26ம்தேதி. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானது அடுத்த நாள்; அதாவது செப்டம்பர் 27ம்தேதி.