'ராஜஸ்தான் ஆளும் காங்கிரஸில் மீண்டும் மோதல்! முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் ஆவேசம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அம்மாநில அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தமது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைகூட அவ்வப்போது உருவாவது வழக்கம்.

காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதாக அறிவித்த போது இந்த மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கே போட்டியிடாத நிலைமையும் உருவானது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முந்தைய பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த வசுந்தரராஜே சிந்தியா உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்கள் மீது ஏன் முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சச்சின் பைலட்டின் கேள்வி.
மேலும் வசுந்தரராஜே சிந்தியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே கோரிக்கை வைத்தோம். இந்த நிமிடம் வரை அசோக் கெலாட் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அப்படியானால் மக்கள் எப்படி காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைப்பார்கள்? என்றார் சச்சின் பைல்ட்.

அதே போல மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மீதும் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தால்தான் மக்கள் நம்புவார்கள். இதை முதல்வர் அசோக் கெலாட் செய்யவில்லை எனவும் சச்சின் பைலட் சீறினார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை மாற்ற வேண்டும் என்ற சச்சின் தரப்பு கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் கிடப்பில் போட்டு கொண்டே வருகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக மீண்டும் வெடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications