வீடியோ, மரண வாக்குமூலம் இருந்தும்.. பசுபாதுகாவலர்களை கொலை வழக்கிலிருந்து விடுவித்த ராஜஸ்தான் போலீஸ்
ஜெய்ப்பூர்: பசுக்களை கடத்துவதாக குற்றம்சாட்டி அப்பாவி முதியவரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரம் இல்லை என அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது ராஜஸ்தான் காவல்துறை.
ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடநத் ஒரு கொலையை மொத்த நாடுமே அதிர்ச்சியோடு கவனித்தது. 55 வயதான டெய்ரி விவசாயி பெலு கான், பசு ரட்சகர்கள் என கூறிக்கொள்வோரால் அடித்து கொல்லப்பட்டார்.
அவர் பசுக்களை கடத்திச் செல்வதாக குற்றம்சாட்டி இக்கொலையை அரங்கேற்றினர் கொலையாளிகள். பெலுகான் அப்படி எதுவும் குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
6 பேர் குற்றவாளிகள்
இந்த சம்பவம் தொடர்பாக ஓம் யாதவ், குகும் சந்த் யாதவ், சுதீர் யாதவ், ஜமால் யாதவ், நவீன் ஷர்மா, ராகுல் ஷைனி ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தன.
செல்போனில் படம்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெலுகான் மரணத்திற்கு முன்பாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குற்றம் நடைபெற்றது எப்படி என்பதையும், கொலையாளிகள் யார் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். வலுவான மரண வாக்குமூலம் ஒருபக்கம் என்றால், நடந்த சம்பவங்கள் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு காட்சிகளாக வெளியே வந்தது மற்றொரு ஆதாரமாக இருந்தது.
போலீஸ் பகீர் முடிவு
இப்படிப்பட்ட நிலையிலும், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராகவும் ஆதாரங்கள் இல்லை என கூறி ராஜஸ்தான் போலீசார் அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக கூறி வழக்கை முடித்துவைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ விசாரணை கோரியது
ராஜஸ்தானிலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால், பசுவுக்காக நடந்த தாக்குதலில் அந்த அரசு குற்றவாளிகளை காப்பாற்றவே முயலும் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ், இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியிருந்தது. இதை ராஜஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியானால் பெலு கானை கொன்றது யார் என்று கேட்கிறார்கள் அவரது குடும்பத்தார்.
நீதி கிடைக்க வேண்டும்
19 வயதாகும் பெலுகானின் மகன், ஆரீப் கூறுகையில், எனது தந்தை உரிய அனுமதிகளை வைத்துதான் பசுமாடு வியாபாரம் செய்து வந்தார். ஆனால் பசு ரட்சகர்கள் என கூறிக்கொண்டவர்கள் அன்றையதினம் எனது தந்தையை விரட்டி சென்று பெல்ட்டாலும், கம்புகளாலும் அடித்தனர். உலோக பொருட்களால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனாலும் ஏப்ரல் 3ம் தேதி இறந்துவிட்டார். அவரது சாவுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று கூறினார். உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் 2015ல் முகமது அக்லக் என்ற இளைஞர் இப்படிப்பட்ட பசு பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். அந்தவழக்கில் இன்னும் நீதிக்காக அவரின் குடும்பத்தார் காத்திருக்கிறார்கள். இதேபோன்ற பசு தொடர்பான பல சம்பவங்களில் குற்றவாளிகள் இன்னும் தண்டனை பெறாமல் சுதந்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.