ஜெயலலிதாவின் தங்கை என்று கூறிக்கொண்டிருந்த சைலஜா பெங்களூவில் மரணம்
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை என்று கூறிவந்த சைலஜா பெங்களூருவில் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
ஜெயலலிதாவின் பூர்வீகம் மண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டையாகும். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். இந்நிலையில் சைலஜா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று கூறி பல வருடங்கள் முன்பே, கன்னட மீடியாக்களுக்கு பேட்டியளித்திருந்தார். இதையடுத்து அந்த மீடியாக்களுக்கு ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த சைலஜா பெங்களூரின், கெங்கேரி அடுத்த ராமச்சந்திரா என்ற பகுதியில் ஏழ்மை நிலையில் வசித்து வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தனது மகள் அமிருதாவை அழைத்துக் கொண்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலைக்கு ஜெயலலிதாவை பார்க்க வந்தார். ஆனால், ஜெயலலிதா யாரையும் பார்க்க மறுப்பு தெரிவித்துவிட்டதால், சைலஜா ஏமாற்றத்துடன் திரும்பினார்.
ஆயினும், ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்காத சைலஜா, எனது அக்கா தவறு செய்திருக்க மாட்டார். ஹைகோர்ட்டில் ஜாமீன் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.
இந்நிலையில், கிட்னி பாதிப்பால் அவதிப்பட்ட சைலஜா, தனது வீட்டருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை செலவு அதிகரித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு டிச்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனவே உடல் நலிந்தபடியே சென்றது. இந்நிலையில் இன்று அதிகாலை சைலஜா மரணமடைந்தார்.