பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் சென்ற சசிகலா! தி.நகரில் மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Recommended Video
பெங்களூர்: 5 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலா காரிலேயே சென்னை சென்றடைந்தார்.
சுமார் 3.15 மணியளவில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்தார் சசிகலா. வீடியோக்களில் அவர் சிக்காமல் இருக்க சிறை வாசலிலேயே காரை கொண்டுவந்துவிட்டு மீடியாக்கள் பார்வையிலிருந்து தப்பிக்க வைத்தனர் அவர் ஆதரவாளர்கள்.
இருப்பினும் கார் நகர்ந்து வந்த பிறகு, வீடியோவில் சசிகலா காருக்குள் அமர்ந்திருந்த காட்சிகள் சிக்கின. பச்சை நிற சேலையில் சசிகலா காணப்பட்டார். கார், ஒசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் வழியாக சென்னை பயணித்தது. காரின் இரு பக்கத்திலும், பாதுகாவலர்கள் இருவர் நின்றபடி பயணித்தனர்.
கார் இரவு 8.20 மணியளவில் சென்னையின் எல்லையான பூந்தமல்லி சென்று சேர்ந்தது. முன்னதாக, வாலாஜாபேட்டை அருகே சற்று நேரம் கார் நிறுத்தப்பட்டு, அங்குள்ள பிரபல ஹோட்டலில் சசிகலா காபி சாப்பிட்டார்.
சென்னை பூந்தமல்லி வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து போரூர் வழியாக கார் பயணித்தது. அங்கும் வானவேடிக்கையோடு, உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து டிராபிக் மற்றும், தொண்டர்கள் வரவேற்பு போன்றவற்றால் கார் மெல்ல ஊர்ந்து சென்றது. சசிகலா தங்க உள்ள தி.நகரிலுள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டை கார் சென்றடைய இரவு 10 மணியானது. வீட்டை சுற்றிலும் நின்ற தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.