சிறையில் சசிகலா ஆபிசர் போல் ரொடேட்டிங் சேரில்தான் உட்காருவாராம்...
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டுதான் பார்வையாளர்களை சசிகலா சந்திப்பார் என்று டிஐஜியாக இருந்த ரூபா தெரிவித்தார்.
சசிகலாவின் அட்டூழியங்கள் குறித்தும் சிறை முறைகேடுகள் குறித்தும் வெளிச்சத்துக்கு கொண்டு சிறை துறை டிஐஜி ரூபா நகர போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு ரூபா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பெங்களூர் சிறையில் ஒரு வரிசையில் உள்ள அறைகள் முழுவதும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் 150 அடி நீளமுள்ள அந்த தாழ்வாரத்தின் முன்பு 5 அறைகள் உள்ளன.
சசிகலா இருக்கும் நடு அறையில் கட்டில், மெத்தை, எல்இடி டிவி ஆகியன இருந்தது. சிறையில் கைதிகள்- பார்வையாளர்களை சந்திக்கும் இடத்தில் 7 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. சசிகலா பார்வையாளர்களை சந்திக்கும் காட்சிகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பதிவாகவில்லை.
ஏனென்றால் சசிகலா வேறு ஒரு இடத்தில் பார்வையாளர்களை சந்தித்துள்ளார். இது விதி மீறல் இல்லையா? பயன்பாட்டில் இல்லாத உயரதிகாரிகள் பயன்படுத்தும் அலுவலக அறையை சசிகலா பயன்படுத்தி இருக்கிறார். அதில் சுழலும் நாற்காலி இருந்தது. எதிரில் சில இருக்கைகள் இருந்தன.
கைதிகளால் நிரம்பி வழியும் சிறையில் ஒருவருக்கு மட்டும் 5 அறைகள் தருவது சரியா? சசிகலாவுக்கும், எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. சிறையில் நடை பெறும் விதிமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தேன். அவ்வளவுதான்.
இவ்வாறு ரூபா கூறியுள்ளார்.