தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையே திருப்பி போடுவேன்- சசிகலா புஷ்பா மிரட்டல்
டெல்லி: அடிமைகளின் கூடாரத்தில் இருக்க விரும்பவில்லை என ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். இரு பெண்கள் மூலம் தன் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையை திருப்பி போடும் செயலில் ஈடுபடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் தமிழக எம்.பிக்கள் திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி, திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா கன்னத்தில் நான்கு முறை அறைந்துள்ளார். மேலும், கன்னத்தில் அறைந்ததை சசிகலா புஷ்பா ஒப்புக் கொண்டார்.
தொடர்ந்து, தமிழகம் திரும்பியதும் கார்டன் சென்ற அவர், ஜெயலலிதாவை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அதன்பின்னர், நாடாளுமன்ற ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச்செயலாளர் தன்னை அடித்தார் என்றும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கம்
ராஜ்யசபாவில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். எனினும், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் வலியுறுத்துகிறது என்றும், ஆனாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் சாசிகலா கூறி வருகிறார்.
பாலியல் புகார்
சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயலாம் என்று கருதப்பட்டது. அதன்படி, சாசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த இரு பெண்கள், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணிப்பெண்கள் புகார்
சசிகலா புஷ்பா குடிபோதையில் தங்களை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம் மற்றும் மகன் பிரதீப் ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவரது வீட்டில் பணிபுரிந்த, திசையன்விளை அருகே உள்ள ஆணகுடியைச் சேர்ந்த பானுமதி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் சமீபத்தில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு
பானுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆபாசமாகத் திட்டுதல், கையால் அடித்தல், வீட்டில் சிறைவைத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் பெண் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 6 பிரிவுகளின்கீழ் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாய் கௌரி ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்ஜாமின் மனு
இதற்கிடையில், இந்தப் புகார் குறித்து விசாரிக்க, ஏ.எஸ்.பி. தீபா கணகர் தலைமையில் தனிப்படை அமைத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசு வாதம்
இந்த மனு, இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன்மீதான முன்ஜாமீன் மனுவை விசாரிக்க, டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு எந்த முகாந்திரம் இல்லை என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்க தடை
சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க எந்த அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு முகாந்திரம் இல்லை என்பதை நாளைக்கு, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கலாம். எனவே, வியாழக்கிழமை (இன்று) அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நீதிபதி முக்தா குப்தா தெரிவித்துள்ளார்.
அடிமைகள் கூடாரம்
இந்நிலையில், டெல்லியில் அளித்த பேட்டி ஒன்றில், அடிமைகளின் கூடாரத்தில் இருக்க விரும்பவில்லை என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். மேலும், இரு பெண்கள் மூலம் தன் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையை திருப்பி போடும் செயலில் ஈடுபடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இன பிரமுகர்களிடம் பேச்சு
பழிவாங்கும் நோக்கத்துடன், தனக்கு கொடூரம் இழைக்கப்படுவதாகவும்; இந்த பிரச்னையில், தன் தரப்பு நியாயம் வெற்றி பெற, ஆதரவாக இருக்குமாறும் கேட்டு, தமிழகத்தில் உள்ள, தன் இனத்து முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு, சசிகலா புஷ்பா போன் போட்டு பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நியாயம் கேட்பேன்
தமிழகத்தில், எத்தனை வழக்குகள் போட்டாலும், அதை, சட்டரீதியில் சந்திப்பேன் என்றும் அதே நேரம், பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குகள் போடப்படுவதை எதிர்த்து, நியாயம் கேட்பேன் என்றும் கூறி வருகிறாராம் சசிகலா புஷ்பா.