சசிகலா புஷ்பாவிற்கு முன்ஜாமீன் கிடைக்குமா?- சுப்ரீம்கோர்ட் திங்கட்கிழமை விசாரணை
டெல்லி: பணிப்பெண்கள் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கோரி ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் இருவர், சசிகலா, அவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தினர் என்று அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
இந்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா அவருடைய லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகிய நான்கு பேர் மீது தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை இரண்டு வாரங்களுக்கு முன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவருடைய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து சசிகலா புஷ்பா வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி வழக்கின் அவசரம் கருதி மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனுவை திங்கட்கிழமை விசாரிப்பதாக கூறியுள்ளது.
சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் தாய்க்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது திங்கட்கிழமை தெரியவரும். முன்ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் அவரும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.