நைட்டியுடன் சிறைக்குள் ஜாலி உலா வந்த சசிகலா.. லீக்கான செல்போன் வீடியோவால் பரபரப்பு
பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அதிமுக பொதுச்செயலாளர் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து சசிகலா சிறைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அதற்காக உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிறை அதிகாரி ரூபா உள்துறை, சிறைத்துறை டிஜிபிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு உண்டானது.
இதனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.
சிசிடிவி காட்சிகள் அழிப்பு
இந்நிலையில் சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் உள்பட உயர் அதிகாரிகள் சிறையிலிருந்த சிசிவிடி காட்சிகளை அழித்து வருவதாக ரூபா இரண்டாவது அறிக்கையை அரசுக்கு எழுதினார். இந்த அறிக்கையையும் ஊடகங்களில் வெளியானது.
மாற்றம்
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 34 கைதிகளை கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர், பெல்லாரி உள்பட பல்வேறு சிறைகளுக்கு இரவோடு, இரவாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர். மேலும் ரூபாவிற்கு ஆதரவாக, சிறைக்குள் நடக்கும் உண்மைகளை சொன்ன சிறைக்கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர்.
செல்போனில் பதிவு
ஒரு சில விவிஐபிக்கள் சிறை அறையில் என்ன நடந்தது என்பதை ரூபா அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார். தவிர ஒரு சில சிசிடிவி காட்சிகளையும் தனியாக சி.டி.யில் அவர் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்த சிறை காட்சிகள் நேற்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரகசிய விசாரணை
இதெல்லாம் ரூபாவிடமுள்ள ஆதாரங்கள்தான் என கூறப்படுகிறது. அவர்தான் மேலதிகாரிகளை நம்பாமல் ஊடகங்களில் கசியவிட்டுள்ளாரா என்ற கோணத்தில் முதல்வர் அறிவுரையின்பேரில் உளவுத்துறை அதிகாரிகளின் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
நைட்டி உடை
மேலும் மாலை நேரத்தில் சசிகலா நைட்டி உடையுடன் வலம் வரும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எந்த கைதிக்கும் இந்த வசதி செய்து தரப்படவில்லையாம். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சசிகலாவிற்கு எதிரான அனைத்து ஆதராங்களையும் திரட்டிய பிறகே அறிக்கையை எழுதியுள்ளார் ரூபா.
ரூபா ரெடி
தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் நேர்மையாக விசாரிக்கவில்லை என்றால், பரப்பன அக்ரஹார சிறைக்குள் நடந்த பல்வேறு முறைகேடுகள், கோடிகள் கைமாறிதற்கான ஆதாரங்களையும் மீடியாக்களில் வெளியிட ரூபாவின் தரப்பு தயாராகி வருகிறது. இதனால் பெங்களூர் சிறை விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.