மேகாலயா சுரங்கத்தில் பாதுகாப்பு இல்லைதான்.. வறுமைக்கான ரிஸ்க் இது .. உயிர் தப்பியவர் பரபர பேட்டி
சிராங்: மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் பாதுகாப்பு இல்லைதான். என்ன செய்வது வறுமைக்காக இதுபோன்று உயிரை பணயம் வைக்க வேண்டியது உள்ளது என்று நிலக்கரி சுரங்க விபத்து சம்பவத்தில் உயிர் தப்பியவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கிழக்கு ஜெயின்தியா மலைகளில் எலி பொந்து அளவிலான ஓட்டையை தோண்டி அதன் மூலம் நிலக்கரி எடுப்பர். இது போன்ற பொந்துகள் ஆபத்து மிக்கவை என்பதால் இந்த நிலக்கரி சுரங்கத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய தீர்ப்பாயம் தடை விதித்தது.
இந்த தடையையும் மீறி இந்த சுரங்கம் லைடீன் நதிக்கு அருகே நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் 14 சுரங்க ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் இவர்கள் பள்ளம் தோண்டும் போது சரிந்து அதில் விழுந்தனர். சுமார் 360 அடி ஆழ பள்ளத்தில் 70 அடிக்கு நீர் தேங்கியது.
15 பேர்
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 15 பேரையும் காணாது அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இது குறித்து சம்பவம் நிகழ்ந்த போது உயிர் தப்பிய சாயப் அலி கூறுகையில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மழை நீர் உள்ளே புகுந்ததும் நான் உள்பட 5 பேர் வெளியேறி விட்டோம். எனினும் 15 பேர் சிக்கியுள்ளனர்.
ரிஸ்க்
இந்த தண்ணீரால் நிலக்கரி மிகவும் இளகியதாக அதாவது களிமண் போல் மாறிவிடும். இந்த நிலக்கரி சுரங்கம் பாதுகாப்பானதாக இல்லை என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் என்ன செய்வது. வறுமைக்காக இதுபோன்ற ரிஸ்க்குகளை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
குடும்பம் நடத்த முடியும்
இந்த சட்டவிரோத சுரங்கத்தில் வீட்டுக்கு ஒருவர் என பணியாற்றி வருகின்றனர். பன்பாரியில் உள்ள படிக்காதவர்கள் இதுபோன்ற சுரங்கத்துக்கு வந்து பணியாற்றுகின்றனர். ஒரு நாளைக்கு ரூ. 2000 சம்பளம். அது எங்களுக்கு தேவைப்படுகிறது. இங்குள்ள மக்கள் மிகவும் ஏழை என்பதால் அது போன்ற ரிஸ்கான வேலைகளுக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்றார் அவர்.
வேதனை
இது போல் தன் கணவர் உயிரோடு இருக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் அவரது சடலத்தையாவது நான் ஒரு முறை பார்க்க வேண்டும் என 15 பேரில் ஒருவரது மனைவி கூறியது வேதனையை தருகிறது.