அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சி: 15 நிமி.யில் ஆளுநர் அறிக்கை தாக்கல் செய்ய சொன்ன சுப்ரீம்கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைத்தது ஏன் என்பது குறித்து வரும் 29-ந் தேதிக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது குறித்து 15 நிமிடத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அருணாச்சல பிரதேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருணாசலப் பிரதேசத்தில் முதல்வர் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அம்மாநில சட்டசபையை கடந்த டிசம்பர் 21-ந் தேதி கூட்டுவதற்கு முதல்வர் நபம் துகி அழைப்பு விடுத்தார்.

இந்த அறிவிப்புக்கு மாறாக, டிசம்பர் 16-ல் சட்டசபை கூடும் என்று அம் மாநில ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா தன்னிச்சையாக அறிவித்தார். இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 21 பேர் திடீரென பாஜகவில் இணைந்தனர். அதிருப்தி காங்கிரஸார் உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் சார்பில் போட்டி சட்டசபை கூட்டமும் நடத்தப்பட்டது. இதற்கு சட்டசபை துணை சபாநாயகரான அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நொர்பு தாங்டாக் தலைமை வகித்தார்.

SC agrees for emergency hearing on plea challenging prez rule in Arunachal

மேலும் இந்தப் போட்டி சட்டசபையில் அருணாசல மாநில முதல்வர் நபம் துகி, சபாநாயகர் நபம் ரெபியா ஆகியோரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. புதிய முதல்வராக அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ காலிகோ பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநர் மற்றும் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நபம் துகி தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்று நபம் துகிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் குவஹாத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் அருணாசலப் பிரசேத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி அங்கு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 24-ந் தேதி பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் தெரிவிக்க நேற்று முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது. இதனிடையே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு 2 மாதங்களுக்குள் அல்லது நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். இனி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான ஒப்புதலை அப்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கோரும்போது காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்க்கும் என்பதுடன் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைக்கும். ஏற்கனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த ஆதரவு பலமடையும் போது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்

இதனிடையே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அவசரமனு மீது உச்சநீதிமன்றம் இன்று பகல் 2 மணிக்கு விசாரணை நடத்தியது.

அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டசபையை கூட்ட உத்தரவிட்டது, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைத்தது தொடர்பாக ஆளுநர் ஜோதிபிரசாத் ராஜ்கோவா, 15 நிமிடங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தியது குறித்து ஏன் தெரிவிக்கவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் தரப்பில் அறிக்கை உடனே தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது தொடர்பாக நாளை மறுநாளுக்குள் (ஜனவரி 29) மத்திய அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+