ராணுவ தளபதி நியமனத்தை எதிர்க்கும் வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
டெல்லி: இந்திய ராணுவ தளபதி நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோர்ட் சம்மதித்துள்ளது.
இந்திய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல், தல்பிர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தளபதி பிக்ரம்சிங் ஓய்வு பெற்றதும், வரும் ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி புதிய தளபதியாக தல்பிர்சிங் சுஹாக் பதவியேற்க உள்ளார். இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு மூத்த அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரவி டஸ்டான், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அடுத்தமாதத்துக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி அண்மையில் பேசுகையில், ராணுவ தளபதி நியமனம் இறுதியானது. இதில் மாற்றமில்லை என்று தெரிவித்திருந்தார். அதே நேரம் முன்னாள் ராணுவ தளபதியும், தற்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான வி.கே.சிங், தல்பிர் சிங் சுஹாக் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தல்பிர்சிங் சுஹாக், வடகிழக்கு பகுதி கமாண்டன்டாக பதவி வகித்தபோது அவருக்கு கீழ் பணியாற்றிய, ராணுவ வீரர்கள் கான்ட்ராக்டர் வீட்டில் இருந்து பொருட்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை குறிப்பிட்டே வி.கே.சிங், புதிய ராணுவ தளபதியாக தல்பிர் சிங்கை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications