அரசு விளம்பரங்களில் முதல்வர், அமைச்சர்கள் போட்டோக்கள் இடம்பெறலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: அரசு விளம்பரங்களில் மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் போட்டோக்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரது படங்களை மட்டுமே தேவைப்படும் பட்சத்தில் உரிய அனுமதி பெற்று அரசு விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதியன்று இந்த உத்தரவை வழங்கியிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உள்ளிட்ட சில தரப்பினர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மாநில முதல்வர்களின் படத்தை வெளியிடக் கூடாது என்கிற இந்த தீர்ப்பு, மாநில உரிமைகளைப் பறிக்கும் தீர்ப்பு என்று கூறி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடுவேயும், தமிழக முதல்வர் படத்தோடு அவ்வப்போது பத்திரிகைகளில் அரசு விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருந்தன.
இந்நிலையில், சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் போட்டோக்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு விளம்பரங்களில் முதல்வர் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற முடியாது. ஏற்கனவே வரையப்பட்ட சுவர் விளம்பரங்களில் கூட முதல்வர் போட்டோ மறைக்கப்பட்டுள்ளது. எனவே புதிய அரசு அமைந்த பிறகுதான், அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்தை பிரசுரிக்கலாம் என்ற அனுமதிக்கு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.