ஜெ. வழக்கு: நீதிபதி பதவி நீட்டிப்பு குறித்து கர்நாடகா ஹைகோர்ட் முடிவு செய்யும்- சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் விலக்கிக் கொள்ளப்பட்ட அரசாணை தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில், அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வந்த பவானி சிங்கை விலக்கிக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. கர்ரநாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பவானி சிங் நீக்கம், வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுவை நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், எஸ்.ஏ. பாப்டே அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது.
அப்போது, பவானி சிங் நீக்கம் தொடர்பான ஆவணங்களை அம்மாநில அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் இ. வாகனவதி நீதிபதிகளிடம் வழங்கினார்.
ராமனை ஏன் நியமிக்கவில்லை?
அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாப்டே, பவானி சிங்கை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கும் முன்பு அப் பதவிக்கு நான்கு பேர் பட்டியலை அம் மாநில உயர்நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த ஸ்ரீதர் ராவுக்கு கர்நாடக அரசு கடந்த ஜனவரி 17-ந் தேதி அனுப்பியது. அதில் மூத்த வழக்கறிஞராக ராமன் இருந்தார். ஆனால், அவரது பெயரைப் பரிசீலிக்காமல் பவானி சிங்கை அப்போதைய பொறுப்புத் தலைமை நீதிபதியான ஸ்ரீதர் ராவ் ஏன் தேர்வு செய்தார்? இந்த வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில், திடீரென்று பவானி சிங்கை கர்நாடக அரசு ஏன் நீக்கியது என்று கேள்வி எழுப்பினார்.
ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
இதையடுத்து நீதிபதி பி.எஸ். சௌஹான், பவானி சிங் நியமனம், பவானி சிங்கை நியமிக்கவும் பின்னர் அவரை விலக்கிக் கொள்ளவும் பிறப்பித்த ஆணை, அது தொடர்புடைய கோப்புகளை கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிபதி நியமனத்துக்கு தடை
மேலும் ஜெயலலிதா மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா இம் மாத இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதி விசாரிக்கத் தொடங்கினால் இந்த வழக்கு மேலும் தாமதமாகும். இதனால் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் புதிய சிறப்பு நீதிபதியை நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாப்டே கேட்டுக் கொண்டார்.
திமுக எதிர்ப்பு
இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்குறிஞர் விகாஸ் சிங் ஆட்சேபம் தெரிவித்தார். 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான வழக்கில் இதுவரை நான்கு நீதிபதிகள் மாறியுள்ளனர். தற்போது ஐந்தாவது நீதிபதி வழக்கை விசாரித்து வருகிறார். ஆனால், இவருக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்க ஜெயலலிதா விடுக்கும் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றார் அவர்.
கர்நாடகா ஹைகோர்ட் முடிவு செய்யும்
இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி நியமனம் பணி நீட்டிப்பு குறித்து எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.