சட்டசபை சஸ்பெண்ட்... 6 தேமுதிக எம்எல்ஏக்களின் மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
டெல்லி: தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டசபையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன் சட்டசபையில் முதல்வரை புகழ்ந்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார், தமிழழகன் பேச்சை கண்டித்தார். இதில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அ.தி.மு.க. ஆதரவு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்த சபாநாயகர் தனபால், அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக சந்திரகுமார், முருகேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி, செந்தில்குமார், அருள்செல்வன் ஆகிய 6 பேரை ஓராண்டுக்கு தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பின்னர் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அந்த தண்டனை 6 மாதமாக குறைக்கப்பட்டது. தங்களை பேரவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி சந்திரகுமார் உள்ளிட்ட 6 பேரும் சென்னை உச்சநீதிமன்றம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சந்திரகுமார் எம்.எல்.ஏ. உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.நிஜ்ஜர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும், சட்டமன்றத்தின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.